கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மர்ம சாவு: போராட்டத்தில் குதித்த கைதிகள்
கோவை: கோவை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி ஒருவர் மர்ம முறையில் இறந்தார். அவரை போலீசார் அடித்துக் கொன்றதாகக் கூறி சக கைதிகள் உண்ணாவிரதம் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை மேட்டுப்பாளையம் சிறுமுகை அருகே இருக்கும் லிங்காபுரத்தைச் சேர்ந்தவர் கருப்பசாமி(54). அவர் கடந்த 2008ம் ஆண்டு மே மாதம் 27ம் தேதி வேட்டைக்கு சென்றபோது ஏற்பட்ட தகராறில் தங்கராஜ் என்பவரை சுட்டுக் கொலை செய்தார். இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
நேற்று காலை கருப்பசாமி நெஞ்சுவலியால் துடித்தார். உடனே சிறை காவலர்கள் அவரை சிறை வளாகத்தில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பிறகு மேல்சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டார் என்றனர்.
இந்த தகவல் அறிந்த சக கைதிகள் சிறை காவலர்கள் அடித்ததால் தான் கருப்பசாமி இறந்துவிட்டார் என்று கூறி உண்ணாவிரதம் இருந்தனர். சில கைதிகள் கட்டிடங்கள், மரங்கள் மீது ஏறி ரகளை செய்தனர். இதனால் சிறை வளாகம் பதட்டமாக காணப்பட்டது.
இதையடுத்து கோவை ஆயுதப்படையைச் சேர்ந்த 200 போலீசார் சிறையில் குவிக்கப்பட்டனர். இந்நிலையில் மருத்துவமனை முன்பு திரண்ட கருப்புசாமியின் உறவினர்கள் அவரது சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி அவரின் உடலை வாங்க மறுத்தனர்.
இந்நிலையில் இது குறித்து சிறை கண்காணிப்பாளர் பழனி கூறுகையில்,
கருப்பசாமி மாரடைப்பால் மரணம் அடைந்தார். நேற்று முன்தினம் இரவு அவர் இருந்த அறைக்கு அருகில் இருந்த கைதிகளிடம் இருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த ஆத்திரத்தில் கைதிகள் கருப்பசாமி போலீசாரால் தாக்கப்பட்டதால் இறந்ததாக வதந்தியை கிளம்பிவிட்டனர். உண்மை தெரிந்த பிறகு கைதிகள் போராட்டத்தை கைவிட்டனர் என்றார்.