தேர்தல் அதிகாரிகள் வாகனத்திலேயே பணப் பரிமாற்றம்? கோவை கலெக்டர் நடவடிக்கை
சென்னை: பணப் பரிமாற்றத்தைத் தடுக்கும் வேலையில் பறக்கும்படை தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில் தேர்தல் நடத்தும் அலுவலர்களின் வாகனத்திலேயே பணப்பரிமாற்றம் நடப்பதாக எழுந்த புகாரையடுத்து, அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளார் கோவை மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்னாயக்.
வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்க தேர்தல் ஆணையம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது வாகன சோதனை நடத்தி கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர்.
ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுவதாக புகார் எழுந்த ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகளை மாற்றிய தேர்தல் ஆணையம், கோவை மாவட்டத்தில் அதிரடியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 'மாவட்ட ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக் அ.தி.மு.கவுக்கு ஆதரவாக செயல்படுகிறார்' என அதிரடி புகார்கள் எழுந்தன.
கோவை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது. " தேர்தல் நடத்தும் அலுவலர்களில் பெரும்பாலானோர் அதிமுக முக்கியப் புள்ளியின் உறவினர்கள். அதிலும், தொண்டாமுத்தூர் தேர்தல் அதிகாரியான மதுராந்தகி, ஆளுங்கட்சி புள்ளியின் வீட்டிலேயே பெரும்பாலும் இருக்கிறார். தெற்கு தொகுதி அலுவலர் காந்திமதியும், ஆளுங்கட்சிப் புள்ளிக்கு வேண்டியவராக இருக்கிறார். இவர்களை மாற்ற வேண்டும்" என்பது தி.மு.க மற்றும் மக்கள் நலக் கூட்டணி வேட்பாளர்களின் புகராகும்.
தொண்டாமுத்தூர் ஆர்.டி.ஓ மதுராந்தகி மற்றும் தெற்குத் தொகுதி தேர்தல் அலுவலரும் மாநகராட்சி துணை ஆணையருமான காந்திமதி ஆகிய இருவர் மீதும் நேற்று அதிரடியான குற்றச்சாட்டுகள் கிளம்பின.
தேர்தல் பணிகளுக்காக, தேர்தல் அலுவலர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு வாகனங்களை அரசு கொடுத்திருக்கிறது. இந்த வாகனங்களை மதுராந்தகியும், காந்திமதியும் பணப் பரிமாற்றத்திற்குப் பயன்படுத்துவதாக, தி.மு.க, காங்கிரஸ், பா.ஜ.க உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள், ஆட்சியர் அர்ச்சனா கவனத்திற்குப் புகாராக கொண்டு சென்றுள்ளனர். '
பணப் பரிமாற்றத்தைத் தடுக்கும் தேர்தல் அதிகாரிகளின் வாகனங்களிலேயே ஆளுங்கட்சிக்கு ஆதரவாக பணப் பரிமாற்றம் நடக்கிறது' எனவும் அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, மதுராந்தகி மற்றும் காந்திமதி ஆகியோரின் வாகனங்களை ஒப்படைக்குமாறு உத்தரவிட்டிருக்கிறார் ஆட்சியர் அர்ச்சனா பட்நாயக்.
அதிகாரிகள் உண்மையிலேயே பணப் பரிமாற்றம் செய்யும் வேலையில் ஈடுபட்டிருந்தால், கடும் நடவடிக்கை எடுக்க என்பது கோவை மாவட்ட வேட்பாளர்களின் கோரிக்கையாகும்.