மாணவிகளை தவறான பாதையில் ஈடுபடுத்த முயன்ற கோவை புனிதாவுக்கு 2 நாள் போலீஸ் கஸ்டடி!
மாணவிகளை தவறான பாதைக்கு ஈடுபடுத்த முயன்ற கோவை தனியார் தங்கும் விடுதி வார்டன் புனிதாவுக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை: மாணவிகளை தவறான பாதைக்கு ஈடுபடுத்த முயன்ற கோவை தனியார் தங்கும் விடுதி வார்டன் புனிதாவுக்கு 2 நாட்கள் போலீஸ் காவல் விதிக்கப்பட்டுள்ளது.
கோவை பீளமேடு பாலரங்கநாதபுரம் பகுதியில் தனியார் மகளிர் விடுதி உள்ளது. இந்த விடுதியை ஜெகநாதன் என்பவர் நடத்தி வந்தார். விடுதியில் வார்டனாக புனிதா என்ற 32 வயது பெண் பணியாற்றினார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு உரிமையாளர் ஜெகநாதனுக்கு பிறந்தநாள் விழா ஒரு தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இதில், கலந்து கொள்ள 4 இளம்பெண்களை புனிதா அழைத்து சென்று, ஜெகநாதனுடன் பாலியல் உறவுகொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார்.
கிணற்றில் குதித்து தற்கொலை
இதுகுறித்த புகாரின்பேரில், பீளமேடு போலீசார் வழக்கு பதிவுசெய்து விசாரித்து வந்தனர். இதையறிந்த விடுதி உரிமையாளர் ஜெகநாதன் நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
நீதிமன்ற காவல்
விடுதி காப்பாளர் புனிதா தலைமறைவானார். இந்நிலையில் கோவை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் எண் 6 நீதிமன்றத்தில் கடந்த ஒன்றாம் தேதி புனிதா சரணடைந்தார். மாஜிஸ்திரேட் கண்ணன் வரும் 14ம் தேதி வரை புனிதாவை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார்.
போலீஸ் மனுத்தாக்கல்
இதையடுத்து போலீசார் பலத்த பாதுகாப்புடன் புனிதாவை கோவை மத்திய சிறையில் அடைத்தனர். இதைத்தொடர்ந்து புனிதாவை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோவை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
புனிதாவுக்கு போலீஸ் காவல்
இந்நிலையில் புனிதாவை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.