பீப் பாடல் விவகாரம்: மே 12-ல் ஆஜராக அனிருத்துக்கு சம்மன்
கோவை: சர்ச்சைக்குரிய பீப் பாடல் விவகாரத்தில் வரும் மே 12-ம் தேதி நேரில் ஆஜராகுமாறு இசையமைப்பாளர் அனிருத்துக்கு கோவை நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.
பெண்களை ஆபாசமாக சித்திரித்து சிம்பு, அனிருத் உருவாக்கிய பீப் பாடல் இணையதளங்களில் வெளியானது. இதையடுத்து, நடிகர் சிம்பு, அனிருத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழகத்தின் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் மனு அளிக்கப்பட்டது.
இதேபோல், பீப் பாடல் விவகாரத்தில் சிம்பு, அனிருத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்றப் பேரவையின் பொதுச் செயலாளர் இளங்கோவன் சார்பில் கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2-இல் கடந்த ஜனவரியில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக, இளங்கோவன், அவரது நண்பர் சிவாஜி ஆகியோரின் வாக்குமூலம் பெறப்பட்டது.
மேலும், சிம்பு, அனிருத் ஆகிய இருவரும் மார்ச் 21-ஆம் தேதி நேரில் ஆஜராக அழைப்பாணை அனுப்பப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பான விசாரணை மாஜிஸ்திரேட் ராஜ்குமார் முன்னிலையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது சிம்பு தரப்பில் அவரது வக்கீல் ராமச்சந்திரன் ஆஜராகி, இந்த வழக்கில் நேரில் ஆஜராவதிலிருந்து சிம்புவுக்கு விலக்கு அளித்த சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கான நகலைத் தாக்கல் செய்தார்.
ஆனால், ஏற்கெனவே அனுப்பிய அழைப்பாணையைப் பெற அனிருத் மறுத்துள்ளார். இதையடுத்து, இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணை மே 12-ஆம் தேதி நடைபெறும்போது, அனிருத் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார்.