காஷ்மீர், உன்னவ் சம்பவத்தை வகுப்பில் பேசிய கோவை மாணவி சஸ்பென்ட்
காஷ்மீர் மற்றும் உன்னவ் சம்பவங்களை வகுப்பில் பேசியதாக கோவை சட்டக் கல்லூரி மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
கோவை: காஷ்மீர் மற்றும் உன்னவ் பலாத்கார சம்பவங்களை பேசியதாக கோவை சட்டக் கல்லூரி மாணவி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
காஷ்மீரில் கத்துவா மாவட்டத்தில் 8 வயது சிறுமி 7 கயவர்களால் வன்புணர்வு செய்யப்பட்டார். இந்த கொடூரச் சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.
இதுமட்டுமல்லாமல் உத்தரப்பிரதேச மாநிலம் உன்னவ் பகுதியில் ஒரு மாணவியை பாஜக எம்எல்ஏவும் அவரது கூட்டாளிகளும் சீரழித்தனர். இந்த சம்பவத்தால் மாணவி தற்கொலை செய்யவும் முயற்சித்தார்.
இரு சம்பவங்களும் கோரம்
இந்த இரு கோர சம்பவங்களும் நாட்டையே உலுக்கியது. கேரளாவில் தங்கள் வீடுகளில் 10 வயது சிறுமிகள் உள்ளதால் பாஜகவினர் வீட்டுக்குள் வரவேண்டாம். கேட்டுக்கு வெளியேவே நில்லுங்க என வீடுதோறும் நோட்டீஸ் வைக்கப்பட்டுள்ளது.
கோவை மாணவி
கோவை அரசு சட்டக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருபவர் பிரியா. இவர் புரட்சி கர மாணவர் முன்னணி அமைப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வகுப்பில் ஆசிரியர் ஒருவர் பொதுவான விஷயங்கள் குறித்து பேசுமாறு கூறினார். அப்போது யாரும் பேச முன்வராததால் பிரியா, காஷ்மீர் விவகாரம் குறித்து பேசி கொண்டிருந்தார்.
மாணவியை திட்டிய பேராசிரியர்
அப்போது அவ்வழியாக வந்த உதவி பேராசிரியர் அம்மு, அந்த மாணவியை திட்டினார். மேலும் வகுப்பில் இதுபோன்று பேசி பிரிவினையை ஏற்படுத்த வேண்டாம் என்று கூறினார். இந்நிலையில் மாணவி பிரியா தங்களை போராட்டம் நடத்துமாறும் வகுப்புகளை புறக்கணிக்குமாறு வற்புறுத்துவதாக உதவி பேராசிரியர் அம்மு மற்றும் முதல்வர் கே கோபாலகிருஷ்ணன் ஆகியோரிடம் சக மாணவர்கள் புகார் கொடுத்தனர்.
இடைநீக்க உத்தரவு
மாணவி பிரியா வகுப்பறையில் மத அரசியல் மற்றும் பாலியல் ரீதியிலான மோதலை ஏற்படுத்தும் வகையில் பேசியதாக அவரை தற்காலிகமாக இடைநீக்கம் செய்து கல்லூரி முதல்வர் உத்தரவிட்டார். ஆசிரியர் அனுமதி கொடுத்ததால்தான் தான் பேசியதாகவும் தன்னை அழைத்தால் தன் தரப்பு நியாயத்தை கூற தயார் என்றும் முதல்வருக்கு பிரியா கடிதம் எழுதியுள்ளார். ஒரு வேளை முதல்வர் அழைக்காவிட்டால், மே மாதம் தேர்வுகள் நடைபெறவுள்ளதால் சட்டரீதியில் அணுக உள்ளதாக தெரிவித்தார்.