சொந்த செலவில் மரம் நடும் நடமாடும் அசோகர் செல்வகுமார்... மக்கள் போற்றும் சபாஷ் மனிதர்!
மரம் வளர்ப்பு குறித்து தன்னுடைய சொந்த வருமானத்தில் ஒரு பகுதியை செலவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த செல்வகுமார்.
கோவை : இயற்கையை பாதுகாக்க மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார் கோவையைச் சேர்ந்த செல்வகுமார்.
வாரத்தின் 5 நாட்களில் வேலை, வார விடுமுறைகளில் சினிமா, ஓட்டல் என்று சம்பாதித்த பணத்தை ஜாலியாக செலவு செய்வது. இது தான் வாழ்க்கை என்று ஓடிக்கொண்டிருப்பவர்கள் மத்தியில் தனி அடையாளத்தோடு இருக்கிறார் கோவையைச் சேர்ந்த செல்வகுமார்.
திருப்பூர் ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகப் பணியாற்றும் செல்வகுமார் வார விடுமுறையானால் செய்யும் வேலையைக் கேட்டால் நாம் எல்லாம் எம்மாத்திரம் என்று நினைக்கத் தோன்றும்.
சனி, ஞாயிறு எப்போது வரும் என்று காத்திருக்கும் செல்வகுமார் சுமார் 100 பாக்கெட்டுகளைக் கொண்ட சட்டையை அணிந்து கொண்டு அதில் மரக்கன்றுகளை சுமந்து சென்று பல்வேறு தரப்பட்ட மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
திருப்பூர் மாவட்டம் காங்கயத்தை சேர்ந்த இவரது தந்தை தங்கராஜ் மரம் வளர்ப்பு தொடர்பாக தொடர்ச்சியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார். அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட தந்தை வழியே சிறு வயதில் இருந்தே இருந்த மரம் வளர்ப்பு ஆர்வம் காரணமாக அது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்.
இயற்கை ஆர்வலர்
உடல் முழுவதும் மரக்கன்றுகளாகவே தெரியும் என்பதால் ஒரு சிலர் நகைத்தாலும், அதை பொருட்படுத்தாமல் தனது பணியை சிரத்தையோடு செய்கிறார் செல்வகுமார். மரக்கன்றுகள் வைத்து உடையை அணிந்துவிட்டால் நாள் முழுவதும் அதன் எடையை தாங்கி நிற்க வேண்டும், எனினும் வலிகளை பொருட்படுத்தால் நல்ல விதையை விதைப்பதிலேயே ஆர்வம் காட்டுகிறார் இந்த சபாஷ் மனிதர். தன்னுடைய சேவையை உணர்ந்து வந்து கேட்போர் மட்டுமின்றி முகம் சுளித்து செல்வோரையும் அழைத்து மரம் வளர்ப்பதன் அவசியத்தை விளக்கி வருகிறார் இந்த நடமாடும் அசோகன்.
ஒத்துழைப்பு
பணம் சம்பாதிப்பதை விட்டுவிட்டு தேவையற்ற வேலையை செய்வதாக முதலில் செல்வகுமாரின் மனைவி வசை பாடினாலும், தற்போது இவரின் விழிப்புணர்வு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை உணர்ந்து அவருக்கு பக்கபலமாக இருக்கிறார். இதனால் முழுஈடுபாட்டுடன் இதனை செய்து வரும் செல்வகுமார், குறைந்த வருமானம் என்றாலும் மாதத்திற்கு ரூ.4,000த்தை மரக்கன்றுகள் வாங்கவே செலவு செய்கிறார்.
ஊக்கப்படுத்தும் செல்வகுமார்
பேருந்து நிலையம், திரையரங்க வாசல்கள், முக்கிய சாலை சந்திப்புகள், பூங்காங்கள் ஆகிய இடங்களுக்கு மரக்கன்று உடையை அணிந்துகொண்டு, வாரந்தோறும் சென்று மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவகமாக வழங்கி வருகிறார் இந்த ஆச்சர்ய மனிதர். இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை விதைத்துள்ள இவர், கன்றுகளை வாங்கிச் செல்வோரிடம் செல்போன் எண்ணை வாங்கி திடீரென போன் செய்து தான் கொடுத்த மரக்கன்று எப்படி வளர்ந்திருக்கிறது என்று சர்ப்ரைஸ் போனும் செய்வாராம்.
நம்முடைய பங்கு என்ன?
எல்லாம் பிளாஸ்டிக் மயமாகிவிட்ட காலச் சூழலில் எதைப் பார்த்தாலும் அது இயற்கை சார்ந்ததா என்று கேட்கும் பழக்கம் நுகர்வோரிடையே அதிகரித்துள்ளது. ஆனால் அதை கடைகளில் கேட்டு வாங்கும் பொருளில் மட்டும் இருக்கக் கூடாது, இயற்கையை செழிப்பாக்க நாமும் எதையாவது செய்ய வேண்டும். பணம் சம்பாதிக்கும் மெஷினாக இல்லாமல் இயற்கையோடு சார்ந்த வாழ்க்கையை வாழ்வதற்கான வழியே செல்வகுமாரின் முயற்சி.
செயலில் காட்டுங்கள்
இதனை உணர்ந்து செயல்பட்டால் மட்டுமே நம் காலத்திலேயே வந்துவிட்ட பிளாஸ்டிக் அரிசி, மரபணு மாற்றப்பட்ட காய்கறி, இறக்குமதி செய்யப்பட்ட உணவு தானியங்கள் என்ற கார்ப்பரேட் பிடியில் இருந்து தப்பிக்க முடியும். என் வீட்டுக்காரனும் கச்சேரிக்கு போனான் என்ற கதையாக மரக்கன்று வாங்கி நட்டுவிட்டேன் என்று தம்பட்டம் அடிக்காமல் அதை வளர்த்தெடுப்பதில் தான் உள்ளது உண்மையான சவால். செல்வகுமாரின் விழிப்புணர்வு முயற்சியால் சில 100 மரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன, அந்த வகையில் அவர் இந்த மண்ணின் மைந்தன் என்று சொல்லும் தகுதியைப் பெற்றுவிட்டார். சபாஷ் செல்வகுமார்!