சசிகுமார் கொலை.. கோவை கலவரத்திற்கு காரணமான 305 இந்து முன்னணியினர் சிறையில் அடைப்பு
கோவை: கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமாரின் இறுதி ஊர்வலத்தின் போது வன்முறையில் ஈடுபட்ட 801 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 305 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கோவை மாவட்ட இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசிகுமார் கடந்த 22ம் தேதி அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.சசிகுமார் கொல்லப்பட்ட தகவல் பரவிய உடன் கோவை முழுவதும் கலவரம் வெடித்தது. பஸ்கள் மீது கற்கள் வீசப்பட்டன. மொத்தம் 20 பஸ்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன.
சில இடங்களில் திறந்து இருந்த கடைகள், ஒரு ஏ.டி.எம். ஆகியவை அடித்து நொறுக்கப்பட்டன. கல்வீச்சில் போலீஸ்காரர் பாலசுப்பிரமணியம் என்பவர் காயம் அடைந்தார். போக்குவரத்தும் வெகுவாக பாதிக்கப்பட்டது
சசிகுமாரின் உடல் கோவை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு பின்னர் ஒரு வேனில் சுமார் 18 கிலோ மீட்டர் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.
இதில் ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் ஒரு தரப்பினர் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் கடைகள், பேருந்துகள், ஆட்டோக்கள், இருசக்கர வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. மேலும் துடியலூர் பகுதியில் இரு கடைகள் மற்றும் காவல்துறை வாகனம் தீவைத்து எரிக்கப்பட்டது.
இந்நிலையில், வன்முறையில் ஈடுபட்டதாக இதுவரை 801 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், பொதுச்சொத்துக்களை சேதப்படுத்திய குற்றத்திற்காக நகரப்பகுதியில் 145 பேரும், புறநகர் பகுதியில் 160 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் திருச்சி, சேலம் மற்றும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.