சாதி பெயரைக் கூறி திட்டிய தலைமை ஆசிரியர் - வகுப்பறையை அடித்து நொறுக்கி மாணவர்கள் ரகளை
கோவை : அரசு பள்ளியில் தலைமை ஆசிரியர் சாதிப் பெயரைக் கூறி திட்டியதால் ஆத்திரமடைந்த மாணவர்கள் வகுப்பறைகளை அடித்து நொறுக்கி ரகளையில் ஈடுபட்டதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கோவை மாவட்டம் சித்தாபுத்தூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று உள்ளது. வழக்கம் போல் இன்று வகுப்புகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சாதிப் பெயரைக் கூறி மாணவர்களை தகாத முறையில் திட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அம்மாணவர்கள் வகுப்பறைகளில் இருந்த நாற்காலிகள், மேஜைகளை அடித்து நொறுக்கி ரகளை செய்தனர். மேலும், தலைமையாசிரியர் அறையை துவம்சம் செய்த மாணவர்கள், அங்கு பட்டாசுகள் வெடித்து ரகளையில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் தீயணைக்கும் கருவிகளை மாணவிகள் முகத்திற்கு அருகே இயக்கியதில், மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 மாணவிகள் மயக்கமடைந்தனர். உடனடியாக ஆசிரியர்கள் மயக்கம் அடைந்த மாணவிகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
மாணவர்களின் இந்த தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். அவர்களிடம் தலைமை ஆசிரியரை உடனடியாக மாற்றக் கோரி தாக்குதல் நடத்திய மாணவர்கள் வலியுறுத்தினர். பின்னர், பள்ளிக்கு இன்று விடுமுறை அளிக்கப் பட்டதைத் தொடர்ந்து மாணவர்கள் கலைந்து சென்றனர்.
கல்வி கற்கும் இடத்தில் மாணவர்கள் இவ்வாறு அராஜகமாக நடந்து கொண்டது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.