கோவையில் டாஸ்மாக் கடையை அடித்து நொறுக்கி சூறையாடி மக்கள் ஆவேசம்
கோவை புலியகுளம் பகுதியில் டாஸ்மாக் கடையை பொது மக்கள் அடித்து நொறுக்கி சூறையாடிய சம்பவம் பரபரப்பை எற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் புலியகுளம் பகுதியில் டாஸ்மாக் கடையை பொதுமக்கள் அடித்து நொறுக்கி சூறையாடினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, உச்சநீதிமன்றம் நெடுஞ்சாலைகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்ற வேண்டும் என்ற உத்தரவையடுத்து, 3321 கடைகள் ஒரே நாளில் மூடப்பட்டன. அவ்வாறு மூடிய கடைகளை ஊருக்குள் கொண்டு வர டாஸ்மாக் நிறுவனம் நடவடிக்கை மேற்கொண்டது.
இதனால் தமிழகம் முழுவதும் பெண்கள் உள்பட அனைவரும் போராட்டம் நடத்தினர். திருப்பூர் சாமளாபுரத்தில் நடைபெற்ற போராட்டத்தில் ஈஸ்வரி என்ற பெண்ணை போலீஸ் அதிகாரி பாண்டியராஜன் அறைந்ததில் அவருக்கு கேட்கும் திறன் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், கோவை புலியகுளம் பகுதியில் டாஸ்மாக் கடை நிறுவப்பட்டுள்ளது. இந்தக் கடையால் தங்கள் குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது. எனவே அந்தக் கடையை அகற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்த பெண்கள், அந்தக் கடையை அடித்து நொறுக்கினர். அக்கடையில் இருந்த பாட்டில்களை உடைத்து சூறையாடினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக அரசு மீண்டும் 1000க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகளை திறக்க முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.