கோவையில் கடற்படை தளம் முற்றுகை... த.பெ.தி.கவினர் கைது!
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை மீட்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோயம்புத்தூர் : கோவையில் உள்ள கடற்படை அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மீனவர்களை மீட்பதில் மத்திய, மாநில அரசுகள் விரைந்து செயல்படவில்லை என்று தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. கடலுக்கு சென்ற மீனவர்களின் நிலை என்னவென்று தெரியாமல் கடந்த 3 நாட்களாக குமரி மாவட்ட மீனவ கிராமத்தினர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
குமரி மீனவர்களுக்கு ஆதரவாக தமிழகத்திலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதனிடையே கோவை புளியங்குளத்தில் உள்ள இந்திய கடற்படை தளத்தை தந்தை பெரியார் திராவிடக் கழகத்தினர் இன்று முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட தந்தை பெரியார் திராவிட கழகத்தினர் கைது செய்யப்பட்டனர். மீனவர்களை மீட்பதில் மெத்தனம் காட்டுவதாக மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து போராட்டத்தின் போது முழக்கங்களும் எழுப்பப்பட்டன.