சசிகுமார் கொலை.. வன்முறையில் ஈடுபட்ட இந்து முன்னணி.. 3 பேர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்
இந்து முன்னணியின் கோவை செய்தித் தொடர்பாளர் சசிகுமார் செப். 22ம் தேதி கொலை செய்யப்பட்டதையடுத்து ஏற்பட்ட வன்முறை வெறியாட்டத்திற்கு காரணமான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது,
கோவை: இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலைக்கு பின்னர் நடந்த இறுதி ஊர்வலத்தின் போது அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் ஊர்வலத்தில் வழியெல்லாம் கடைகளை அடித்து நொறுக்கி, வாகனங்களை தீவைத் கொளுத்தி வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களில் 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
கோவை துடியலூர் சுப்ரமணியபாளையத்தைச் சேர்ந்தவர் சசிகுமார். 36 வயதான இவர், இந்து முன்னணியின் கோவை மாவட்ட செய்தித் தொடர்பாளராக இருந்தார். இவர் கடந்த செப்டம்பர் 22ம் தேதி இரவு வீட்டிற்கு திரும்பிய போது, திடீரென 4 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று வந்து அவரை நடு ரோட்டில் ஓட ஓட விரட்டி கொன்றது. ரத்த வெள்ளத்தில் சரிந்த சசிகுமார், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உயிரிழந்தார்.
இதனையடுத்து, இந்து முன்னணியினர் வன்முறையில் ஈடுபடத் தொடங்கினார்கள். பேருந்துகள் மீது கற்கள் வீசப்பட்டன. 20 பேருந்துகளின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. கடைகள், ஏடிஎம் இயந்திரங்கள் அடித்து சூறையாடப்பட்டன. இந்த வன்முறை வெறியாட்டத்தின் போது பாலசுப்பிரமணியம் என்ற போலீஸ்காரரும் படும்காயம் அடைந்தார்.
இந்த சம்பவத்தையடுத்து, வன்முறையில் ஈடுபட்ட 300க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். இவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்திய பின்னர், திருச்சி, வேலூர், மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து, கோவை மாநகரில் வன்முறையில் ஈடுபட்டு பொதுச் சொத்துக்களை சேதப்படுத்திய 18 பேர் குண்டர் சட்டம் ஏற்கனவே பாய்ந்தது. இந்நிலையில், தற்போது மேலும், மகேந்திரன், சசிகுமார், மோகன்ராஜ் ஆகிய 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இதன் மூலம் சசிகுமார் கொலையையடுத்து நடந்த வன்முறை சம்பவத்தில் குண்டர் சட்டம் பாய்ந்தவர்களின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.