தீரன் பட பாணியில் கோவை பெண் கொடூர கொலை - மேற்கு வங்க கொள்ளையர்கள் வெறிச்செயல்
தீரன் படம் சினிமா பாணியில் கோவையில் வட மாநில கொள்ளையர்கள் தனியாக இருந்த தம்பதிகளிடம்
கோவை: கோவை மாவட்டம் அன்னூர் அருகே வீட்டில் டைல்ஸ் பதிக்கும் வேலை பார்த்த வடமாநில தொழிலாளர்கள் பெண்ணை கொடூரமாகத் தாக்கிக் கொலை செய்துவிட்டு, அந்த பெண்ணின் கணவரை மின்சாரம் பாய்ச்சி கொலை செய்ய முயற்சி செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள கனுவக்கரை கிராமத்தைச் சேர்ந்த விவசாயி மயில்சாமி. இவரது மனைவி ராஜாமணி. இவர்களுக்கு, இரண்டு மகள் உள்ளனர். தங்கள் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இவர்களின் வீட்டில் டைல்ஸ் ஒட்டும் பணி நடைபெற்று வந்துள்ளது. கோவையைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவரின் மூலம் டைல்ஸ் பதிக்கும் பணியில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 தொழிலாளர்களை ஈடுபடுத்தியிருந்தார்.
இவர்கள் மூவரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதால், இரவு அவர்களின் வீட்டிலேயே தங்கி, பணி மேற்கொண்டு வந்தனர். இதையடுத்து, நேற்று, டைல்ஸ் ஒட்டும் பணியை மேற்கொண்ட மூவரும், இரவு 12 மணி அளவில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜாமணியை, கதவு தட்டி எழுப்பிக் குடிக்க தண்ணீர் கேட்டுள்ளனர்.
உருட்டுக்கட்டையால் அடித்து கொலை
கதவை திறந்த மயில்சாமியின் மனைவி ராஜாமணியிடம் குடிக்க தண்ணீர் வேண்டும் எனக் கேட்டுள்ளனர். இதனை நம்பிய ராஜமாணி கதவை திறந்து வைத்துவிட்டு தண்ணீர் எடுக்கச் சென்றுள்ளார். அப்போது, திடீரென வீட்டிற்குள் புகுந்த அந்த கும்பல், உருட்டுக் கட்டை, கம்பி உள்ளிட்டவற்றால் ராஜாமணியைக் கடுமையாக தாக்கிக் கொலை செய்துள்ளனர்.
நகை பணம் கொள்ளை
ராஜாமணியின் அலறல் சத்தம் கேட்டு வந்த கணவர் மயில்சாமியையும் சுற்றி வளைத்து பிடித்த, வடமாநில தொழிலாளர்கள் பின்னர் கட்டிவைத்து தாக்கியுள்ளனர். முதலில் கொலை செய்த ராஜாமணியின் உடலை ஒரு மூட்டையில் கட்டி வைத்துவிட்டு, வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்தனர். மயில்சாமியின் மீது மின்சாரத்தை பாய்ச்சி கொலை செய்ய முயற்சி செய்துள்ளனர். மயில்சாமியின் அலறல் சத்தம் கேட்டு அருகிலிருந்தோர் வருவதைக் கண்ட கொள்ளையர்கள், வீட்டின் பின்வாசல் வழியாக தப்பியுள்ளனர்.
கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்
மின்சாரம் பாய்ந்த வலியில், மயில்சாமி அலறவே அக்கம், பக்கத்தினர் மயில்சாமியின் வீட்டுக்குச் சென்றுள்ளனர். ஆனால், அதற்குள், வட மாநிலக் கொள்ளையர்கள் மூவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். மயில்சாமியை மீட்ட கிராம மக்கள், அன்னூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை அனுமதித்தனர். ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார் மயில்சாமி.
தொழிலாளர்கள் போர்வையில் கொள்ளையர்
தகவலறிந்த அன்னூர் காவல்துறையினர், மோப்ப நாய் மற்றும் தடவியல் நிபுணர்களுடன் வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்தக் கொலை சம்பவம் குறித்து, துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயில்சாமி வீட்டில் டைல்ஸ் வேலைக்கு வந்தவர்கள் உண்மையில் வடமாநில தொழிலாளர்கள் தானா, அல்லது தொழிலாளர்கள் போர்வையில் வந்த வடமாநில கொள்ளையர்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
வயதான தம்பதியர் பாதிப்பு
உறவினர்களின் துணையில்லாமல் தனியாக வசிக்கும் வயதான தம்பதியினர் முன்பின் அறிமுகம் இல்லாத நபர்களை வேலைக்கு வைக்கும் முன், அவர்களின் பின்னணி குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும்
என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். வயதானவர்களுக்கு காவல்துறையினர் போதிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.