கோவை பெண்ணை கொடூரமாக கொன்ற வடமாநில கொள்ளையர்கள் எங்கே? தேடும் போலீஸ்
கோவை அன்னூரில் பெண் கொலை கொன்று விட்டு தப்பிய கொள்ளையர்களின் செல்போன் எண்ணைக் கொண்டு அவர்களின் இருப்பிடத்தை அறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர்.
கோவை: அன்னூர் அருகே தோட்டத்தில் தங்கியிருந்த பெண்ணை கொன்று விட்டு, கணவர் மீது மின்சாரம் பாய்ச்சி விட்டு நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற வட மாநில கொள்ளையர்களை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.
கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கணுவாக்கரை ஊஞ்சல் குட்டை தோட்டத்தை சேர்ந்தவர் மயில்சாமி, இவரது மனைவி ராஜாமணி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். ஒரு மகள் கோவையில் வேலை பார்த்து வருகிறார். மற்றொரு மகள் படித்து வருகிறார்.
தம்பதியர் இருவரும் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தனர். இவர்கள் புதிதாக வீடு கட்டி வருகிறார்கள். இதற்கு டைல்ஸ் ஒட்டும் பணியில் மேற்கு வங்காளத்தை சேர்ந்த 3 பேர் பணியாற்றி வந்தனர்.
கூட இருந்தே குழி பறித்த கொள்ளையர்
தொழிலாளர்கள் 3 பேரும் தோட்டத்து வீட்டிலேயே தங்கி வேலை செய்தனர். அவர்கள் மூன்று பேருக்கும் ராஜாமணி சமைத்து போட்டார். சம்பவ தினத்தன்று டைல்ஸ் ஒட்டும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் திடீரென ராஜாமணியை கொன்று விட்டு மயில்சாமி மீது மின்சாரத்தை பாய்ச்சி கொல்ல முயற்சி செய்தனர். சத்தம் போடவே நகை, பணத்தை எடுத்துக்கொண்டு சென்று விட்டனர்.
கொலையாளிகள் அடையாளம்
இந்த கொலை -கொள்ளை குறித்த தகவல் கிடைத்ததும் கோவை மாவட்ட போலீஸ் எஸ்பி மூர்த்தி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டார். கொள்ளையர்களை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை விசாரணையில் கொலையாளிகள் குறித்து அடையாளம் தெரிந்தது.
கொலை, கொள்ளை
மேற்கு வங்காளத்தை சேர்ந்த சாம்ராட்,25, அஜய்,18, பிந்து, 25 என்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவர்கள் பெண்ணை கொன்று நகை,பணத்தை கொள்ளையடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் தப்பி சென்றது தெரிய வந்தது.
அவர்கள் வைத்திருந்த செல்போன் எண்ணை வைத்து விசாரித்த போது அவர்கள் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது.
கொள்ளையர்கள் பதுங்கல்
இதையடுத்து, ஈரோடு மாவட்ட போலீசாருக்குத் தகவல் அளித்தனர். இதனையடுத்து ஈரோடு அதிவிரைவுப்படை மற்றும் ஆயுதப்படை போலீசார் அடங்கிய, 50 பேர் கொண்ட குழுவினர் பெருந்துறை சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலை முதல், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். பெருந்துறை டி.எஸ்.பி. தலைமையில் 10 போலீசார் சென்னிமலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
துண்டு பிரசுரங்களுடன் தேடும் பணி
பெருந்துறை சுற்றுப்பகுதிகளில் பதுங்கி இருக்கலாம் என்ற கோணத்தில், வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியுள்ள பகுதிகளில் தேடிய போலீசார், கொள்ளையர்களின் புகைப்படம் அடங்கிய துண்டு பிரசுரங்களையும் வினியோகித்தனர். இதனால் பெருந்துறையில் பரபரப்பு ஏற்பட்டது.
தனிப்படை போலீசார் தேடுதல்
இதேபோல் சென்னிமலையில் துலுக்கம்பாளையம் பகுதியில், வடமாநில தொழிலாளர்கள், அதிகம் வசிக்கும் பகுதியில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். கொலையாளிகள் ரயிலில் தப்பி விடக் கூடும் என்ற நோக்கத்தில் திருப்பூர், ஈரோடு, கோவை, சேலம் ஆகிய ரயில் நிலையங்களிலும் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
செல்போனை வீசிவிட்டார்களா?
கோவையில் இருந்து, ரயிலில் வடமாநிலத்துக்கு தப்பிச் சென்றபோது, துலுக்கம்பாளையம் பகுதியில் செல்போனை வீசிச் சென்றிருக்கலாம் எனக் கருதிய போலீசார், ரயில்வே டிராக்கின் இருபுறமும் செல்போனைத் தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆந்திராவிற்கு தப்பி சென்று விட்டார்களா என்றும் விசாரித்து வருகின்றனர். சென்னை, திருப்பூர், புளியம்பட்டி, சத்தி ஆகிய இடங்களுக்கும் தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர்.