டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பியதால் ஆத்திரம்... தூங்கிக் கொண்டிருந்த கணவரை எரித்த மனைவி கைது!
கோவையில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கணவர் மீது, ஆத்திரத்தில் மனைவி மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை: கோவையில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கணவர் மீது, மண்ணெண்ணெய் ஊற்றி நெருப்பு வைத்த மனைவியை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை பீளமேடு விளாங்குறிச்சி சாலை பகுதியில் வசித்து வருபவர் ராமச்சந்திரன் (30). இவரது மனைவி சுமதி (28). கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொண்ட இத்தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ராமச்சந்திரன் பீளமேட்டில் உள்ள ஒரு உணவகத்தில் வேலை செய்து வந்தார். ஒருவர் வருமானத்தில் குடும்பத்தை நடத்துவது கஷ்டம் என்பதால், கடந்த சில மாதங்களுக்கு முன் அதே பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் சுமதியும் வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
ஆனால், சுமதி வேலைக்கு சென்றதில் ராமச்சந்திரனுக்கு விருப்பம் இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே, அவர் சுமதியை வேலையை விட்டுவிடச் சொல்லி வற்புறுத்தியுள்ளார்.
இதனால், கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் இருவரும் ஒரே வீட்டில் வாழ முடியாது என்ற நிலை ஏற்பட, அதே பகுதியில் தனியாக ஒரு வீடெடுத்து தங்கினார் ராமச்சந்திரன்.
அதோடு, கடந்த சில நாள்களுக்கு முன் விவாகரத்து கேட்டு சுமதிக்கு அவர் நோட்டீசும் அனுப்பியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த சுமதி நேற்று அதிகாலை ராமச்சந்திரன் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
அங்கு ராமச்சந்திரன் உறங்கிக் கொண்டிருக்கவே, அவர் மீது தான் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணெய்யை ஊற்றி அவர் தீ வைத்தார். உடலில் தீ பற்றவே திடுக்கிட்டு விழித்த ராமச்சந்திரன், வலியால் அலறியுள்ளார்.
ராமச்சந்திரனின் அலறலைக் கேட்டு விரைந்து வந்த அக்கம்பக்கத்தார், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே, கோவை இராமநாதபுரத்தில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுமதி சரணடைந்தார். பின்னர், அவர் பீளமேடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தந்தை மருத்துவமனையிலும், தாய் காவல் நிலையத்திலும் உள்ளதால் அவர்களது இரண்டு குழந்தைகளும் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.