கோவையில் மாணவிகளை கட்டிலுக்கு அழைத்த விடுதி உரிமையாளர் மர்ம மரணம்... கிணற்றில் சடலமாக மீட்பு
கோவையில் விடுதி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளார்.
கோவை: கோவையில் விடுதி மாணவிகளை படுக்கைக்கு அழைத்த விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் ஆலங்குளத்தில் உள்ள கிணற்றில் மர்மமான முறையில் மரணம் அடைந்துவிட்டார். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பீளமேடு பாலரங்கநாதபுரத்தில் மகளிர் விடுதி ஒன்று உள்ளது. இங்கு கல்லூரி மாணவிகள், வேலை செய்யும் இளம் பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
ஜெகந்நாதன் என்பவருக்கு சொந்தமான இந்த விடுதியில் ஹாஸ்டல் வார்டனாக இருப்பவர் புனிதா. விடுதியில் உள்ள பெண்கள், கல்லூரி மாணவிகளை பிறந்த நாள் விழாவுக்கான பார்ட்டி என்று கூறி புனிதா அவர்களை நட்சத்திர விடுதிக்கு அழைத்து சென்றுள்ளார்.
மது அருந்த வற்புறுத்தல்
மாணவிகளை மதுஅருந்த வற்புறுத்தியுள்ளார். மேலும் விடுதி உரிமையாளர் ஜெகந்நாதனுடன் வாட்ஸ் ஆப் வீடியோவில் பேசவும் வற்புறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.
விடுதி முற்றுகை
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்துள்ளார். இதுகுறித்து மாணவிகள் தங்கள் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து பெற்றோர்களும், உறவினர்களும் விடுதியை முற்றுகையிட்டனர்.
தலைமறைவு
இதனால் அச்சமடைந்த விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் மற்றும் காப்பாளர் புனிதா ஆகியோர் தலைமறைவாகிவிட்டனர். இதையடுத்து புகாரின் பேரில் இருவரின் பேரிலும் பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் பீளமேடு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
பரபரப்பு
இருவரையும் பிடிக்க பீளமேடு காவல் ஆய்வாளர் செல்வராஜ் இரு தனிப்படைகள் அமைத்துள்ளார். இந்நிலையில் விடுதி உரிமையாளர் ஜெகந்நாதன் ஆலங்குளத்தில் உள்ள ஒரு கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது சடலத்தை மீட்ட போலீஸார் அதை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தற்கொலையா அல்லது கொலையா என விசாரணை நடத்தி வருகின்றனர்.