நாடு முழுக்க பன்னாட்டு குளிர்பான விற்பனையில் பலத்த அடி.. ஆரம்பித்து வைத்த தமிழகம்!
Recommended Video
சென்னை: இந்தியாவில் பன்னாட்டு குளிர்பானங்கள் விற்பனை சரிவை சந்தித்துள்ளன. இதற்கான காரணங்கள் பல என்றபோதிலும், அதன் சரிவுக்கு முதலில் பிள்ளையார் சுழி போட்ட பெருமை தமிழகத்தை சேரும்.
1990களில் பெருமைமிகு பிராண்டாக பார்க்கப்பட்ட குளிர்பானங்கள் குறித்த பார்வை இப்போது மாறத்தொடங்கியுள்ளது. உடல் நலன் மீதான அதன் தாக்கம் உலகமெங்கும் இப்போது விவாதப்பொருளாகியுள்ளது.
இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே அது உடல் நலன் சார்ந்த பிரச்சினையாக மட்டுமின்றி, பன்னாட்டு சதி என்ற கோணத்திலும் வாதம் தொடங்கியது.
ஜல்லிக்கட்டு போராட்டம்
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதலே இதற்கான வாதம் தமிழகத்தில் தொடங்கியது. பீட்டா அமைப்பு ஜல்லிக்கட்டு தடைக்காக போராடியதால் வெகுண்டெழுந்த ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளம் பெண்கள் என மொத்த பேரின் கோபமும் அனைத்து பன்னாட்டு நிறுவனங்கள் மீதும் பாய்ந்தது. அப்போதுதான் கோக் மற்றும் பெப்சி ஆகிய பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான கோஷங்கள் வலுப்பெற்றன. "இங்க அடிச்சா, அங்க வலிக்கும்" என்ற மையக் கருத்து வேரூன்றியது.
வணிகர் சங்கங்கள்
மக்களின் கோபப்பார்வை பன்னாட்டு நிறுவனங்கள் மீது இருப்பதை உணர்ந்துதான் தமிழ்நாடு வணிகர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் வெளிநாட்டு குளிர்பானங்களை விற்பனை செய்வதற்கு கெடுபிடிகளை செய்ய ஆரம்பித்தன. விற்பனையை நிறுத்தப்போவதாக எச்சரித்தன. பெரும்பான்மை மக்களிடம் விழிப்புணர்வு சென்று சேர்ந்தது.
14000 கோடி சந்தை
தமிழகத்தின் கார்பொனேட் பான தொழிலின் சந்தை மதிப்பு ரூ.14,000 கோடி. இதில் கோக், பெப்சி ஆதிக்கம் செலுத்துகின்றன. தமிழகத்தில் பெப்சி 60 சதவீத மார்க்கெட் ஷேர் வைத்துள்ளது. இரு நிறுவனங்களும் தமிழகத்தில் ஐந்து இடங்களில் ஆலைகள் அமைத்தன. உள்ளூர் நடிகர்கள் மூலம் தீவிர விளம்பர யுக்தி செயல்படுத்தப்பட்டது. மொத்தமாக இவற்றின் விற்பனை நிறுத்தப்பட்டால் அவ்விரு நிறுவனங்களுக்கும் ரூ.14,000 கோடி இழப்பு ஏற்படும்.
தேசிய அளவில் தாக்கம்
தமிழகத்தில் எழுந்த பெப்சி, கோக் தடை குறித்த விவாதம், தேசிய அளவிலும் முக்கிய இடம் பிடித்தது. 2016ல் இந்திய அளவில் குளிர்பான விற்பனை 5.3 சதவீதமாக திடீரென சரிந்தது. மீடியாக்களின் ஓவர் பிரசாரம்தான் இதற்கு காரணம் என பன்னாட்டு குளிர்பான அதிகாரிகள் ஆக்ரோஷ கருத்துக்களை கூறினர். இது ஒருபக்கம் என்றால், உலகளாவிய அளவில் மக்களிடம் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்துள்ளதும், குளிர்பான விற்பனை சரிவுக்கு காரணம்.
புதுவகை பாட்டில்
பெப்சியும், கோக்கும் உலக அளவில் விற்பனை சரிவை சந்தித்து வருகின்றன. எனவேதான் சோடா போன்ற பானங்களிலும், சிப்ஸ் உள்ளிட்ட நொறுக்கு தீனி வியாபாரத்திலும் அதிக கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளன. பெப்சி விரைவில் இந்தியாவில் புதுவகை பாட்டில்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதை கடைக்காரரிடம் திருப்பி செலுத்த தேவையிருக்காது என்பதால் அப்படியாவது மக்கள் வாங்குவார்களா என்பது எதிர்பார்ப்பு. 46 சதவீதமாக இருந்த பெப்சியின் கண்ணாடி பாட்டில் விற்பனை 19 சதவீதமாக குறைந்துள்ளதால் இதுபோன்ற புது முயற்சிகளில் பெப்சி இறங்கியுள்ளது.
எதிர்ப்புகள்
இப்போது கோககோலா இந்தியாவில் சுமார் 250 சீனியர் அதிகாரிகளுக்கு கல்தா கொடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கேரளாவில் கோக் ஆலைக்கு எதிர்ப்பு கிளம்பியதால் அது சமீபத்தில் மூடப்பட்டது. போலவே, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகாவிலும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. "ஆனா, விதை, தமிழ்நாடு போட்டது.." என சிவாஜி கணேசன் டயலாக்கை சொல்லி சிலாகிக்றார்கள் தமிழக ஜல்லிக்கட்டு ஆர்வலர்கள்.