குளிரால் நடுங்கும் சென்னைவாசிகளுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி!
Recommended Video
சென்னை: அடுத்த சில நாட்களுக்கு குளிரின் தாக்கம் குறைவாக இருக்கும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
டிசம்பர் மாதம் இறுதி முதல் இப்போது வரை, சென்னையின் இரவு பொழுது கடும் குளிரால் சூழப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்த வெப்பம் சென்னையில் பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு, இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 17.6 டிகிரி செல்ஷியஸாக குறைந்துள்ளது.
இதுகுறித்து பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியுள்ளதாவது: வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை என்பது வலுவானது அல்ல. நீங்கள் செயற்கைக்கோள்படத்தை காலையில் பார்த்தால் புரிந்திருந்திருக்கும், தமிழகத்தில் மழைமேகங்கள் கடற்கரைப்பகுதியை விட்டு விலகி இருப்பதை பார்க்கலாம். இப்போது முழுமையாக சென்றுவிட்டது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை
தென்தமிழக கடற்கரைப்பகுதியில் நாளை மேகக்கூட்டங்கள் மீண்டும் வரும். கிழக்கில் இருந்து வீசும் காற்று காரணமாக தென் தமிழகத்தில் 11 மற்றும் 12-ந்தேதி வரைகூட மழையை எதிர்பார்க்கலாம். ஆதலால், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். இந்த வலுகுறைந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலையால், டெல்டா மற்றும் தென் தமிழகத்தின் மாவட்டங்கள் அதிக மழையை பெறும்.
மிதமான மழை
டெல்டா மாவட்டங்களில் இருந்து தூத்துக்குடி வரையிலான கடற்கரைப்பகுதிகளில் நல்ல மழையை எதிர்பார்க்கலாம். அடுத்த 2 நாட்களில் இந்த குறைந்தகாற்றழுத்த தாழ்வு நிலை வலுவிழந்து மன்னார் வளைகுடா பகுதிக்கு செல்லும். டெல்டா மண்டலம், கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் 9 மற்றும் 10ந்தேதிகளில் மிதமான மழை இருக்கும்.
நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்டங்கள்
தூத்துக்குடி, மற்றும் நெல்லை மாவட்டங்களில் ஒன்று அல்லது 2 முறை கனமழைக்கு வாய்ப்பு உண்டு. கன்னியாகுமரி மாவட்டத்தில் மிதமான மழை ஒருநாள் பெய்யலாம். அந்த மாவட்டத்தைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் மதிமான முதல் கனமழை பெய்யும். 9ந்தேதி முதல் 12 ந்தேதிவரை மழை இருக்கும்.
டெல்டா மற்றும் கடலூர் மாவட்ட விவசாயிகளைப் பொருத்தவரை இந்த மழை அவர்களை பெருமளவு பாதிக்காது. அறுவடை நேரத்தில் இருக்கும் பயிர்களையும் பெரிதாக பாதிக்காது.
குளிர் குறையும்
சென்னை மற்றும் வட தமிழ்நாடு(காஞ்சிபுரம், கடலூர், திருவள்ளூர், புதுச்சேரி) சென்னை மற்றும் வடதமிழக மாவட்ட மக்கள் மழை குறித்து பெரிய அளவில் நம்பிக்கை ஏதும் வைக்க வேண்டாம். வழக்கமான, இயல்பாகவே பெய்யும். அடுத்த 2 நாட்களுக்கு ரெயின்கோட், குடை எடுத்துக்கொண்டு வெளியே செல்லுங்கள். ஏனென்றால், சென்னையைப் பொருத்தவரை ஒரு இடத்தில் மழை பெய்தாலும், மற்ற பகுதியில் மழை இருக்காது. அடுத்த சில நாட்களுக்கு குளிர்ந்த இரவு இருக்காது. அடுத்த சில நாட்களுக்கு மழை மேகக்கூட்டங்கள் நகர்வதால், இரவில் அதிகமான அளவுக்கு குளிர் இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இதற்கு மகிழ்ச்சியான செய்தி என பின்னூட்டங்களில் நெட்டிசன்கள் மகிழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளனர்.