அப்படியென்னதான் அக்கப்போரோ? ஒரே மேடையில அருகருகே உட்கார்ந்தும் பேசாத நக்மா, குஷ்பு!
ராகுல்காந்தி கைதுக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் ஒரே மேடையில் குஷ்புவும், நக்மாவும் அருகருகே அமர்ந்தும், இருவரும் முகம் கொடுத்து கூட பேசிக்கொள்ளவில்லை.
சென்னை : சம காலத்தில் ஹீரோயின்களாக நடித்து, இப்போது அரசியலிலும் ஒரே கட்சியில் இருக்கும் நக்மா, குஷ்பு இடையே பனிப்போர் நிலவுவதாக தகவல் வெளியானது. இன்றைக்கு ராகுல் காந்திக்கு நடத்திய ஆர்பாட்டத்தில் அது வெட்டவெளிச்சமானது.
டெல்லியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதைத் கண்டித்து இந்தியா முழுக்க காங்கிரஸ் கட்சியினர் போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.
ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை அறிவிக்க வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்த போராட்டத்தில் ராம்கிஷன் கிரேவால் என்ற ராணுவ வீரர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் டெல்லி ராம்லோகியா மருத்துவமனையில் இருந்த நிலையில், இவரது குடும்பத்தினரை மருத்துவமனையில் சந்தித்து ஆறுதல் கூற முற்பட்ட ராகுல் காந்தி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு ஐந்தர் மந்தர் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டார்.
கண்டன ஆர்பாட்டம்
ராகுல்காந்தி மீண்டும் மீண்டும் மருத்துவமனையில் ராணுவ வீரரின் குடும்பத்தினரைச் சந்திக்க முயல மூன்று முறை கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். ராகுல் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து தமிழக முழுக்க போராட்டம் நடந்துவரும் நிலையில் வள்ளுவர் கோட்டத்தில் திருநாவுக்கரசர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்பாட்டத்தில் குமரி அனந்தன், பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், குஷ்பு, நக்மா, உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பேசிக்காத குஷ்பு, நக்மா
கட்சியின் மூத்த தலைவர்கள் திருநாவுக்கரசரின் அருகில் அமர்ந்திருக்க, மேடையில் அனைவருக்கும் முன்பாக நக்மாவிற்கும், குஷ்புவிற்கும் நாற்காலி போடப்பட்டிருந்தது. கண்டன கூட்டத்தில் அனல் பறக்க பேசி பிரதமர் மோடியை கண்டித்து விட்டு அமர்ந்தார் குஷ்பு. நக்மாவின் அருகில் அமர்ந்தாலும், இருவரும் ஒருவரை ஒருவர் முகம் கொடுத்து கூட பேசிக் கொள்ளவில்லை. நக்மா சில நிமிடங்கள் கண்களை மூடிக்கொண்டார்.
பனிப்போர்
காங்கிரஸ் கட்சியில் நக்மா சீனியர். ஆனால் குஷ்பு திமுகவில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு மாறி வந்தவர். இருவருமே அகில இந்திய அளவில் பொறுப்பில் இருக்கின்றனர். இருவருக்கும் இடையே பனிப்போர் நிலவுவதாக கூறி வந்த நிலையில் இன்றைக்கு ஆர்பாட்டத்தில் இருவருமே அருகருகே அமர்ந்திருந்தும் பேசிக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அது சரி ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியின் பெண் எம்.எல்.ஏவான விஜயதாரணி இன்றைய ஆர்பாட்டத்தில் தட்டுப்படவில்லையே ஏன்?