குடிநீர் பஞ்சம்.. கோக், பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணியில் நீர் எடுக்க தடை… ஆட்சியர் அதிரடி உத்தரவு
கோக், பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணியில் இருந்து நீர் எடுக்கக் கூடாது என்று மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
திருநெல்வேலி: குடிநீருக்கே தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், கோக், பெப்சி நிறுவனங்கள் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுக்க கூடாது என்று திருநெல்வேலி ஆட்சியர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தாமிரபரணியில் இருந்து வெளியேறும் உபரி நீர்தான் பெப்சி மற்றும் கோக் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது என்று சொல்லப்பட்ட நிலையில், தாமிரபரணி ஆற்றில் இருந்து நீர் எடுக்கத் தடை விதிக்க வேண்டும் என்று வழக்கறிஞர் பிரபாகரன் என்பவர் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, பெப்சி, கோக் நிறுவனங்களுக்கு தண்ணீர் வழங்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்தது.
வழக்கு
இதனைத் தொடர்ந்து நவம்பர் 22ம் தேதியில் இருந்து பெப்சி மற்றும் கோக் நிறுவனங்களுக்கு தாமிரபரணியில் இருந்து தண்ணீர் வழங்கப்படவில்லை. இதனை எதிர்த்து, வழக்குத் தொடர்ந்த வழக்கறிஞர் பிரபாகரனுக்கும் தங்களுக்கும் முன்விரோதம் இருப்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று பெப்சி, கோக் நிறுவனங்கள் சார்பில் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது.
போராட்டம்
இதனையடுத்து, பெப்சி மற்றும் கோக் நிறுவனங்கள் தாமிரபரணியில் இருந்து தண்ணீர் எடுத்துக் கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்தத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ள முடியாத சமூக இயக்கங்கள், அரசியல் கட்சிகள் போராட்டங்கள் நடத்தின.
உத்தரவு
இந்நிலையில், கடுமையான வறட்சி திருநெல்வேலி மாவட்டத்தில் நிலவி வருவதால், போதிய அளவு தண்ணீர் இல்லாததாலும் பெப்சி, கோக் உள்ளிட்ட தொழிற்சாலைகளுக்கு தண்ணீர் விடக் கூடாது என்று நெல்லை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தடை
பாபநாசம், மணிமுத்தாறு அணைகளில் உள்ள நீர் வரும் 30ம் தேதி வரை மட்டுமே கைகொடுக்கும்.அந்த அளவிற்கு மிகக் குறைந்த அளவு நீர் மட்டுமே அணைகளில் உள்ளது. எனவே, குடிநீர் தட்டுபாட்டை சமாளிக்கும் வகையில் தாமிரபரணியில் இருந்து ஏப்ரல் 30ம் தேதி வரை நீர் எடுக்கக் கூடாது என்று ஆட்சியர் தடை உத்தரவு பிறப்பித்துள்ளார்.