காதலை மறுத்த பிரியா.. அரிவாளை எடுத்த இசக்கிமுத்து.. ஓடி வந்த அண்ணனுக்கும் வெட்டு!
கல்லூரி மாணவியை இளைஞர் அரிவாளால் வெட்டி தப்பி உள்ளார்.
ஏர்வாடி: ஒரு வருஷமாக எத்தனையோ முறை தனது காதலை சொல்லியும் ஏற்காத காரணத்தினால் கல்லூரி மாணவியை இளைஞர் அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஏர்வாடி அருகே உள்ள பகுதி ராமகிருஷ்ணாபுரம். இங்கு வசித்து வரும் பிரியா என்னும் இளம் பெண்ணை இசக்கி முத்து என்பவர் காதலித்து வந்துள்ளார். அதனால் போன வருடம் பிரியாவை நேரில் சந்தித்து தனது காதலையும் சொன்னார்.
பிளாடால் கிழித்தார்
ஆனால் பிரியாவோ, எனக்கு காதல் எல்லாம் பிடிக்காது என்று சொல்லி இசக்கிமுத்துவை மறுப்பு சொல்லி இருக்கிறார். பிரியா காதலிக்க மாட்டேன் என்று சொல்லவும், இசக்கிமுத்து, ஆத்திரம் அடைந்து தன்னிடமிருந்த பிளேடை வைத்து பிரியாவின் முகத்தை கிழித்துள்ளார். இது பெரிய பிரச்சனை ஆகி போலீசில் நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.
கட்டாயப்படுத்தினார்
ஆனாலும் இசக்கிமுத்துவுக்கு பிரியா மேல் இருந்த காதல் குறையவில்லை. அதனால் தொடர்ந்து தன் காதலை ஏற்று கொள்ளுமாறு செல்போனில் கேட்டுக் கொண்டே இருந்தார். நேற்றிரவும் போன் செய்த இசக்கிமுத்து, பிரியாவை எப்படியாவது தன்னை காதலிக்க கட்டாயப்படுத்தினார். கடைசி வரை பிரியா ஒத்துக் கொள்ளவில்லை.
அரிவாள் வெட்டு
அதனால் ஆத்திரம் அடைந்த இசக்கி முத்து, இன்று காலை நேராக பிரியா வீட்டுக்குள் நுழைந்தார். அங்கே தூங்கி கொண்டிருந்த பிரியாவை கையிலிருந்த அரிவாளை கொண்டு சரமாரியாக வெட்டினார். சுதாவின் கழுத்து, கைகளில் பலமான அரிவாள் வெட்டு விழுந்தது. பிரியாவின் அலறல் சத்தம் அவரது அண்ணன் அங்கே ஓடிவந்தார். அவரையும் இசக்கி முத்து வெட்டினார்.
வழக்கு பதிவு
அண்ணன்-தங்கை இருவரும் கூச்சல் போடவும் அக்கம்பக்கம் இருந்தவர்கள் ஓடிவந்தனர். அதற்குள் இசக்கி முத்து தப்பி ஓடிவிட்டார். பிறகு படுகாயம் அடைந்த இருவரும் மீட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஏர்வாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய இசக்கிமுத்துவை தேடி வருகின்றனர்.