காதலை ஏற்க மறுத்த மாணவிக்கு அரிவாள் வெட்டு… புதுச்சேரியில் பரபரப்பு
புதுச்சேரி: காதலை ஏற்க மறுத்த மாணவியை கல்லூரி வாசலில் அரிவாளால் வெட்டி படுகாயமடையச் செய்துள்ளார் ஒரு தலையாக காதலித்த வாலிபர். புதுச்சேரியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் பி.எஸ்.சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் இரண்டாம் ஆண்டு படித்து வரும் மாணவி கஜோல் (19). இவர், செவ்வாய்கிழமையன்று மாலை கல்லூரி முடிந்து வெளியே வந்து கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் மாணவி கஜோலை தடுத்து நிறுத்தியுள்ளனர். நடந்த சம்பவத்தை உணரும் முன்போ அரிவாளால் வெட்டினர். இதில், மாணவியின் கழுத்து, தோள்பட்டை, முதுகு போன்ற பகுதிகளில் பலத்த வெட்டு விழுந்தது.
இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த மாணவர்கள் உடனே, மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாணவியை கொன்று சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
தகவல் அறிந்த மதகடிப்பட்டு காவல்துறையினர் உடனடியாக விசாரணையை தொடங்கினர். இதுதொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.அப்போது அவர், தன்னுடைய காதலை கஜோல் ஏற்க மறுத்துவிட்டதால் வெட்டியதாக கூறினார். போலீசில் அளித்த வாக்குமூலத்தில், ''நான் செஞ்சி அருகே துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவன். கடந்த 5 வருடத்திற்கும் மேலாக கலிதீர்த்தாள் குப்பத்தில் உள்ள எனது மாமா வீட்டில் தங்கி இருக்கிறேன். அப்போதுதான், கஜோலை சந்தித்தேன். அவளை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் அவளை ஒருதலையாகக் காதலித்து வந்தேன். அதை அவளிடமும் பலமுறை கூறினேன். ஆனால், அவள் என்னை காதலிக்க மறுத்து விட்டாள். எனவே, தான் இன்று அவளை வெட்டினேன்'' எனக் கூறியுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் காரைக்காலில் காதலை ஏற்க மறுத்த வினோதினி மீது ஆசிட் வீசி கொலை செய்தான் ஒரு கொடூரன். தற்போது புதுச்சேரியில் காதலை ஏற்க மறுத்த மாணவி கஜோல் அரிவாளால் வெட்டப்பட்டுள்ளார். காதலை சொல்ல உரிமை ஒருவருக்கு இருக்கும் போது அதை மறுக்கும் உரிமை எதிராளிக்கு உண்டு என்பது கூட தெரியாத முட்டாள்கள் வாழும் நாட்டில் இன்னும் இதுபோல் எத்தனை சம்பவங்கள் நிகழப்போகிறதோ?