கல்லூரி மாணவி கழுத்தறுத்து கொலை.. தாய்மாமனே கொன்ற கொடுமை
தஞ்சை: தஞ்சை அருகே கல்லூரி மாணவியை சொந்த தாய்மாமனே கழுத்தறுத்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம், மன்னார்குடி அடுத்த, மந்தக்கரை கிராமத்தை சேர்ந்த ரங்கசாமி, மல்லிகா தம்பதியினரின் மகள் விக்டோரியா. இவர் மன்னார்குடி அரசு கலைக் கல்லூரியில், பி.பி.ஏ., முதலாமாண்டு படித்து வந்தார்.
வெளிநாட்டில் வேலை பார்த்து வரும் மல்லிகாவின் உடன் பிறந்த தம்பி தினேஷ், விடுமுறைக்காக சொந்த ஊர் வந்திருந்தார். நேற்று மாலை, கல்லூரியில் இருந்து வீடு திரும்பிய விக்டோரியாவை தினேஷ் அருகிலுள்ள தென்னந்தோப்புக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
சிறிது நேரத்தில், விக்டோரியாவின் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அருகிலிருந்தவர்கள் சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்று பார்த்துள்ளனர். அப்போது, விக்டோரியா கழுத்து அறுபட்டு, கத்தியால் குத்தப்பட்டு இறந்து கிடந்துள்ளார். அருகில் தினேஷ் இல்லை.
இது தொடர்பாக உடனடியாக பெருவாழ்தான் போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப் பட்டது. விரைந்து வந்த போலீசார் விக்டோரியாவின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தினேஷ் தான் விக்டோரியாவைக் கொன்றிருக்க வேண்டும் என சந்தேகிக்கப் படுகிறது. தலைமறைவாக உள்ள தினேஷைப் போலீசார் தேடி வருகின்றனர். கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.