85 சதவீத மதிப்பெண், கை நிறைய பணம்: மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விருதுநகர் கல்லூரி பேராசிரியை
85 சதவீத மதிப்பெண்கள், கை நிறைய பணம் வாங்கித் தருவதாக மாணவிகளை பாலியல் தொழிலுக்கு அழைத்த விருதுநகர் கல்லூரி பேராசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் கல்லூரி பேராசிரியை நிர்மலா 4 மாணவிகளை கட்டாயப்படுத்தி மதுரை காமராஜர் பல்கலையின் உயரதிகாரிகளுடன் படுக்கைக்கு அழைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அருப்புக்கோட்டையில் தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரி மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வருகிறது.
இங்கு கணிதத் துறையின் பேராசிரியராக இருப்பர் நிர்மலா. இவர் தேர்வுத்தாள்களை திருத்துவதற்காக மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துக்கு அடிக்கடி சென்று வருவது வழக்கம்.
நிர்மலாவிடம் கோரிக்கை
அவ்வாறு சென்று வந்த போது அவரை அணுகிய உயரதிகாரிகள் கல்லூரியில் இருந்து மாணவிகளை படுக்கைக்கு அழைத்து வந்தால் நிர்மலாவுக்கு வேண்டிய உதவிகளையும் , பணத்தையும் தருவதாகவும் அவ்வாறு வரும் மாணவிகளுக்கு கட்டாயம் 85 சதவீத மதிப்பெண்களையும் கை நிறைய பணத்தையும் தருவதாகவும் உறுதியளித்தனர்.
மாணவிகளிடம் புரோக்கர் போல் பேசிய நிர்மலா
வறுமை நிலையில் உள்ள கல்லூரி மாணவிகள் 4 பேரை தொலைபேசி மூலம் நிர்மலா தொடர்பு கொண்டார். அப்போது அவர் உயரதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொண்டால் படிக்காமலேயே 85 சதவீத மதிப்பெண்களும், கை நிறைய பணமும் வாங்கி தருவதாக கூறியுள்ளார். ஒரு கல்லூரியின் பேராசிரியை பெண் புரோக்கர் போல் பேசுவதை கேட்டு மாணவிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
விட்டுவிடுங்கள்
இதையடுத்து மாணவிகள் 4 பேரும் இதில் எங்களுக்கு விருப்பமில்லை. எனவே இது பற்றி மேலும் பேச வேண்டாம் என்று தெரிவித்த பின்னரும் அந்த மாணவிகளை விடாமல் அவர்களை கட்டாயப்படுத்தினார். இது தொடர்பாக 19 நிமிடங்கள் மாணவிகளுடன் பேசியுள்ள ஆடியோ தற்போது வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் குறித்து மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர்.
தவறாக புரிதல்
இதையடுத்து பேராசிரியை நிர்மலாவிடம் கல்லூரி நிர்வாகம் விசாரணை நடத்தியது. அப்போது அவர் மாணவிகளிடம் பேசியது உண்மைதான், ஆனால் தான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுவிட்டதாக விளக்கம் அளித்தார். எனினும் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்த நிர்வாகம் நிர்மலாவை 15 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.
நடவடிக்கை தேவை
பேராசிரியை நிர்மலா இவ்வாறு பெண் புரோக்கர் போல் செயல்பட்ட நிலையில் அவருக்கு பின்புலத்தில் இருக்கும் அந்த மதுரை பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகள் யார் என்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.