200 அடி உயர அருவியில் செல்ஃபி... பேராசிரியர் தவறிவிழுந்து பலி.. வேலூரில் சோகம்
வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள வீரணமலையின் 200 அடி உயர அருவியில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்ற கல்லூரி பேராசிரியர் தவறி விழுந்து பரிதாபமாக பலியானார்.
வேலூர்: வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த தமிழக ஆந்திர எல்லையில் அமைந்துள்ளது வீரணமலை. இந்த மலைப் பகுதியில் கடந்த வாரங்களில் பெய்த தொடர் மழையால் 200 அடி உயரத்தில் இருந்து புதிய அருவிகள் உருவாயின.
இந்த திடீர் அருவிகளைப் பார்ப்பதற்கும், அவற்றில் குளிக்கும் ஆவலிலும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் குவியத் தொடங்கினர். எந்தவித அடிப்படை வசதிகளும் இன்றி பாதுகாப்பற்ற முறையில் அமைந்துள்ள திடீர் அருவியில் குளிப்பதிலும் ஆர்வம் காட்டி வந்தனர். கடந்த 4 நாட்கள் தொடர் விடுமுறை என்பதால் வழக்கத்தைவிடக் கூட்டம் அதிகமாக இருந்தது.
புதன்கிழமை வாணியம்பாடி உதயேந்திரம் பகுதியைச் சேர்ந்த கல்லூரி விரிவுரையாளர் அருள் என்பவர் அருவியில் குளித்துவிட்டு அருவியின் மேல்பகுதியில் இருந்து செல் போனில் செல்ஃபி எடுத்து விளையாடினார். அப்போது அருவி உருவாகும் இடத்தில் இருந்து செல்பி எடுக்க முயன்ற போது கால் இடறி 200 அடி பள்ளத்தில் விழுந்து சம்பவ இடத்திலேயே உடல் சிதறி அருள் உயிரிழந்தார்.
தகவலறிந்து வந்த ஆந்திர காவல்துறையினர், பாதுகாப்பற்ற மலை அருவியில் அனுமதியின்றி குளித்துக் கொண்டிருந்தவர்களை விரட்டி அடித்தனர். பின்னர் 200 அடி பள்ளத்தில் விழுந்து உயிரிழந்த கல்லூரி பேராசிரியர் அருளின் உடலை மீட்டு குப்பம் மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
செல்ஃபி மோகத்தால் கல்லூரி பேராசிரியர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.