திருவண்ணாமலையில் கல்லூரி மாணவி தற்கொலை.. கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் விபரீதம்
கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் மனமுடைந்த மாணவி தற்கொலை செய்துகொண்டார்.
திருவண்ணாமலை: கல்லூரிக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாததால் மாணவி ஒருவர் தன் வீட்டு மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
காஞ்சி சாலை மின்ரோடு பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன். இவர், வீடு, கடைகளுக்கு தண்ணீர் கேன் சப்ளை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் திவ்யபிரபா, தன் மாவட்டத்திலேயே ஒரு தனியார் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வருகிறார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு டெர்ம் ஃபீஸ் என சொல்லக்கூடிய கல்லூரி பருவ கட்டணம் செலுத்த வேண்டும் என்பதால், பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் அவரது தந்தைக்கு போதிய வருமானம் இல்லாததால், பணம் தரவில்லை என கூறப்படுகிறது.
இதனால் மிகவும் மனம் உடைந்து காணப்பட்டார் திவ்யபிரபா. இந்த நிலையில் திவ்யபிரியா கடந்த 26-ந் தேதி மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர், படுகாயமடைந்து உயிருக்கு போராடிய மகளை உடனடியாக மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு திவ்யபிரபாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.