ப்ளூவேல் - விக்னேஷ் மரணம்: மக்கள் பீதியடைய வேண்டாம் - மதுரை ஆட்சியர் - வீடியோ
ப்ளூவேல் விளையாட்டில் ஈடுபட்டு விக்னேஷ் என்ற கல்லூரி மாணவன் மரணம் அடைந்ததையடுத்து பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மதுரை: மதுரை விளாச்சேரி பகுதியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற கல்லூரி மாணவன் ப்ளுவேல் என்ற ஆன்லைன் விளயட்டில் ஈடுபட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளைஞர்களும் சிறுவர்களும் ஆன்லைனில் ப்ளூவேல் என்றவிளையாட்டை விளையாடி வருகின்றனர். அந்த விளையாட்டு தற்கொலையை ஒரு 'டாஸ்க்'-ஆக செய்யும் விபரீத விளையாட்டு. இந்த விளையாட்டில் ஈடுபட்டிருந்த மதுரை விளாச்சேரி மொட்டமலையைச் சேர்ந்த விக்னேஷ் என்ற கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த சம்பவம் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறந்துபோன விக்னேஷின் கையில் நீலத் திமிங்கலம் வரைந்து வைத்துள்ளார். அதுவும் அந்த விளையாட்டின் ஒரு டாஸ்க். இந்த சம்பவம் குறித்துப் பேசிய மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ் ராவ், காவல்துறைக்கு இந்த ஆன்லைன் விளையாட்டு குறித்து டெக்னிகலாக ஆய்வு செய்ய அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. ஆகையால் மக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என கூறியுள்ளார்.
காவல்துறை அதிகாரி, பரமேஸ்வரி தலைமையில் இதுகுறித்து ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டுள்ளது என மதுரை காவல்துறையை சேர்ந்த உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த விளையாட்டுக்கு சிறுவர்களும் இளைஞர்களும் பலியாவதால் பெற்றோர் கூடுதல் கவனத்துடன் இருப்பது அவசியம் என குடும்ப நல ஆலோசகர்கள் அறிவுறுத்துகின்றனர்.