வர்தா புயலால் ‘கட்’ ஆன கரண்டு கம்பியை பிடித்து கல்லூரி மாணவர் பலி
வர்தா புயலால் துண்டிக்கப்பட்ட மின்சாரம் மீண்டும் வந்தது தெரியாமல் மின்கம்பியைத் தொட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்தார்.
திருவள்ளூர்: கடந்த வாரம் வர்தா புயல் சுழற்றி அடித்ததால் துண்டிக்கப்பட்ட மின்சாரம் மீண்டும் வந்தது தெரியாமல் மின்கம்பத்தைத் தொட்டதால் கல்லூரி மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.
கடந்த வாரம் அடித்த வர்தா புயலால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. சுழற்றி அடித்த சூறைக் காற்றால் மின்சார கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. மின்சார கம்பிகள் அறுந்து விழுந்தன. இதனால், இந்த 3 மாவட்டங்களும் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கின.
இதனைத் தொடர்ந்து தமிழக அரசு எடுத்து வரும் முயற்சியால் மின்கம்பங்கள், அறுந்து விழுந்த மின்சார கம்பிகள் சரி செய்யப்பட்டு வருகின்றன. இதனைத் தொடர்ந்து பகுதி பகுதியாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.
மின்சாரம் வழங்கப்பட்டது தெரியாமல் திருவள்ளூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் கல்லூரி மாணவர் அரவிந்தன் மின்சார கம்பத்தில் கை வைத்துள்ளார். தொட்ட உடன் தூக்கி எறியப்பட்ட அரவிந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார். இதனால் அந்தப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.