சோகத்தில் முடிந்த பிறந்த நாள் கொண்டாட்டம்: மெரீனாவில் மூழ்கி மாணவர் சாவு!
சென்னை: பிறந்த நாள் கொண்டாட மெரீனா கடற்கரைக்கு வந்த கல்லூரி மாணவர் கடலில் மூழ்கி உயிரிழந்தார்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை பொழிச்சலூரைச் சேர்ந்தவர் சிவக்குமார் (20). இவர் மேடவாக்கத்தில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாமாண்டு படித்து வந்தார். அவருடன் அதே வகுப்பில் ஹையாத் என்ற மாணவர் படித்து வருகிறார்.
ஹையாத்துக்கு திங்கள்கிழமை பிறந்த நாள். இதனால், சிவக்குமார் மற்றும் அவருடன் படிக்கும் வாஹித் (20) உள்ளிட்ட 5 பேர், ஹையாத்தின் பிறந்த நாளைக் கொண்டாட, மெரீனா கடற்கரைக்கு நண்பகல் வந்தனர்.
அங்கு சிவக்குமாரும், வாஹித்தும் கடலில் இறங்கி குளித்துள்ளனர். இருவரும் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்தார்களாம். அப்போது, பெரிய அலை இருவரையும் கடலின் உள்பகுதிக்கு இழுத்துச் சென்றது. அலையில் சிக்கிக் கொண்ட சிவக்குமாரும், வாஹித்தும் தங்களை காப்பாற்றும்படி அலறினர்.
இதைக் கேட்ட கரையில் நின்ற அவர்களது நண்பர்கள், இருவரையும் காப்பாற்ற முயன்றனர். ஆனால், அவர்களால் வாஹித்தை மட்டுமே மீட்க முடிந்தது. சிவக்குமார் கடலுக்கு இழுத்துச் செல்லப்பட்டார். மீட்கப்பட்ட வாஹித், ராயப்பட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே, சிறிது நேரத்தில் சிவக்குமார் சடலம் கரை ஒதுங்கியது. தகவலறிந்த அண்ணா சதுக்கம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜீவானந்தம் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிவக்குமார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.