சென்னையில் பட்டாகத்தியுடன் சுற்றிய கல்லூரி மாணவன்... போலீசிடம் சிக்கினான்!
சென்னையில் பட்டாகத்தியுடன் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை : சென்னையில் பட்டாகத்தியுடன் சுற்றித் திரிந்த புதுக்கல்லூரி மாணவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
சென்னையில் அண்மைக்காலமாக மாணவர்கள் மத்தியில் பட்டாகத்தி நடமாட்டம் அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்னை நெமிலிச்சேரி ரயில் நிலையத்தில் வன்முறையில் ஈடுபட்டு கல்லூரி நிர்வாகத்தால் நீக்கப்பட்ட திருவள்ளூர், அரக்கோணம் பகுதியை சேர்ந்த மாணவர்கள், சென்னை பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் மீண்டும் அரிவாள், பட்டாகத்தி போன்ற ஆயுதங்கள் கொண்டு வன்முறையில் ஈடுபட்டனர்.
பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் புறநகர் ரயில்களில் அனைவர் முன்னிலையிலும் பட்டாகத்தியுடன் மாணவர்கள் சுற்றித் திரிந்தது அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் சென்னை சென்ட்ரல் பகுதியில் இன்று மீண்டும் புதுக்கல்லூரியைச் சேர்ந்த மாணவன் பிரணீத் பட்டாகத்தியுடன் சுற்றித் திரிந்துள்ளான். போலீசாரின் சோதனையின் போது பிடிபட்ட அவனிடம் நடத்திய விசாரணையில் வேறு ஒரு கல்லூரி மாணவனை தாக்குவதற்காக கத்தியை வைத்திருந்ததாக கூறியதையடுத்து பிரணீத்தை போலீசார் கைது செய்தனர்.