தொடரும் மாணவர்கள் போராட்டம்: தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி முன்பு மாணவர்கள் தர்ணா
பேருந்து கட்டண உயர்வை எதிர்த்து தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம் நடத்தி வருகின்றனர்.
Recommended Video
தஞ்சாவூர் : பேருந்து கட்டணத்தைக் குறைக்க வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் போராடி வரும் நிலையில், இன்று தஞ்சாவூர் சரபோஜி கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
தமிழக அரசு பேருந்து கட்டணங்களை கடந்த 20ம் தேதி திடீரென்று உயர்த்தியது. இந்த அதிக கட்டண உயர்வால் பொதுமக்கள், மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனைக் கண்டித்து கடந்த ஒரு வார காலமாக தமிழகம் முழுவதும் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். சென்னை, கோவை,மதுரை, வேலூர், நெல்லை ஆகிய இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டு உள்ளது. நேற்று சென்னை அயனாவரத்தில் போராட்டம் நடத்திய மாணவர்கள் காவல்துறையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை தஞ்சாவூரில் உள்ள சரபோஜி கல்லூரி மாணவர்கள் 500க்கும் மேற்பட்டோர், பேருந்து கட்டணத்தை உடனடியாகக் குறைக்கக் கோரி கல்லூரி வாயில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்தப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளதால், பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.