அனிதா மரணத்திற்கு நீதி தேவை.. தமிழகம் முழுவதும் மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்
அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு கல்லூரிகளில் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை: அனிதாவின் மரணத்துக்கு நீதி கேட்டு பல இடங்களில் கல்லூரிகளில் மாணவர்கள் தங்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றும் நீட் தேர்வில் போதிய மதிப்பெண்கள் பெற முடியாததால் அரியலூர் அனிதாவின் மருத்துவ கனவு தகர்ந்தது. எனினும் விடாபிடியாக உச்சநீதிமன்றம் வரை சென்றும் அவருக்கு நீதி கிடைக்கவில்லை.
இதனால் மனமுடைந்த அனிதா கடந்த 1-ஆம் தேதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைத் தொடர்ந்து அன்று முதல் அனிதாவின் மரணத்துக்கு நீதி கோரி மாநிலம் முழுவதும் மாணவர்கள் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
போராட்டம் தீவிரம்
இந்நிலையில், அனிதா மரணமடைந்து 3 நாட்கள் ஆகியும் போராட்டங்களின் வீரியம் குறையாமல் இன்றும் போராட்டங்கள் நடைபெற்றன. அனிதாவுக்கு நீதி வழங்க கோரி கும்பகோணம் அரசு கலை கல்லூரி, தஞ்சை மன்னர் சரபோஜி, குந்தவை நாச்சியார் அரசினர் மகளிர் கல்லூரிகளிலும், திருச்சி, மயிலாடுதுறை, விருத்தாசலம் ஆகிய இடங்களில் உள்ள கல்லூரிகளிலும் மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டனர்.
நீட் தேர்வை ரத்து செய்யுங்க
அனிதாவுக்கு நீதி கோரியும் நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும் மாணவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இதேபோல் தூத்துக்குடி, நெல்லை சங்கரன்கோவில், அரியலூரிலும் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
விழுப்புரம் கல்லூரிக்கு விடுமுறை
விழுப்புரம் அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் அனிதாவுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால் கல்லூரிக்கு 2 நாட்கள் விடுமுறை அளித்துள்ளது கல்லூரி நிர்வாகம்.
ராமநாதபுரம்...
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சேதுபதி அரசினர் கலைக் கல்லூரி கல்லூரி மாணவர்கள் அனிதா மரணத்திற்கு பொறுப்பேற்று மத்திய மாநில அரசுகள் பதவி விலக வலியுறுத்தி வகுப்பு புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். திருவள்ளூர் பொன்னேரி அரசு உலகநாத நாராயணசாமி கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரி மாணவர்களும் அனிதாவுக்கு நீதி கேட்டு ஊர்வலம் நடத்தினர்.