சென்னை பேருந்தில் மாணவர்கள் மோதல்: மாணவி காயம் - 2 பஸ்கள் சேதம்
சென்னை: சென்னையில் பேருந்தில் இருவேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் மோதிக்கொண்டதில் பயணிகள் காயமடைந்தனர். இரண்டு பேருந்துகள் சேதமடைந்தன.
சென்னை தியாகராய நகரில் இருந்து பிராட்வே செல்லும் மாநகர பேருந்து (தடம் எண்-11) நேற்று பிற்பகலில் பிராட்வே நோக்கி சென்று கொண்டிருந்தது. பேருந்தை டிரைவர் தனபால் ஓட்டி சென்றார்.
அண்ணாசாலை சாந்தி தியேட்டர் அருகில் பேருந்து சென்ற போது அதில் பயணம் செய்த மாணவர்கள் திடீரென்று ரகளையில் ஈடுபட்டனர்.
அப்போது சுமார் 25 மாணவர்கள் அரிவாள், கத்தி, கம்புடன் புகுந்து தாக்கினார்கள். மாணவர்களிடையே நடந்த இந்த மோதலில் பேருந்தே போர்க்களமாக மாறியது. இதில் பேருந்துக்குள் இருந்த பயணிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் அலறினார்கள்.
உடனே டிரைவர் பேருந்தை டேம் ரோட்டில் ஓரமாக நிறுத்தினார். மாணவர்கள் பேருந்தின் கண்ணாடிகளையும் அடித்து நொறுக்கினார்கள். இதில் ஜன்னல் ஓரமாக இருந்த ஒரு மாணவிக்கு கண்ணாடி குத்தி ரத்த காயம் ஏற்பட்டது.
ஒரு பிரிவு மாணவர்கள் பேருந்தை விட்டு இறங்கி ஓடினார்கள். அவர்களை எதிர்தரப்பு மாணவர்கள் ஓட ஓட விரட்டி தாக்கினார்கள்.
இந்த தாக்குதலில் அந்த வழியாக சென்ற 18 கே பஸ்சும் சேதம் அடைந்தது. இந்த சம்பவத்தால் அண்ணா சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சென்னையில் கல்லூரி மாணவர்கள் அடிக்கடி மோதிக்கொள்ளும் சம்பவம் சகஜமாகிவருகிறது. ரவுடித்தனம் செய்யும் மாணவர்கள் கல்லூரியை விட்டு உடனடியாக டிஸ்மிஸ் செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கை விடுத்தும் மாணவர்கள் தொடர்ந்து மோதலில் ஈடுபடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.