அண்ணா சாலையில் கத்தியுடன் பயங்கர மோதல் - சென்னை தின நாளில் பெயரைக் கெடுத்த மாணவர்கள்!
சென்னை: சென்னை மாநகரின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வரும் நாளில் சென்னை அண்ணா சாலையில் ஒரு கல்லூரி மாணவர்களை, இன்னொரு கல்லூரி மாணவர்கள் கத்தியுடன் துரத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் மாணவர்களைத் துரத்திப் பிடித்து ஒருவரைக் கைது செய்து கத்தியைப் பறிமுதல் செய்தனர்.
சென்னையில் கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்படுவது நீண்ட காலமாகவ இருந்து வருகிறது. இந்த மோதல் சில நேரங்களில் வன்முறையாக மாறும்போது பெரும் பரபரப்பும், மக்களுக்குப் பாதிப்பும் ஏற்பட்டு விடுகிறது.
குறிப்பிட்ட சில கல்லூரி மாணவர்களுக்கு இடையேதான் இந்த மோதல் தொடர் கதையாக உள்ளது. கிட்டத்தட்ட பரம்பரைச் சண்டை போல இருந்து வருகிறது. பங்காளிகளாக பழக வேண்டிய மாணவர்கள் கடைசி வரை பகையாளிகளாகவே கல்லூரி வாழ்க்கையை முடிக்கும் நிலையும் பல இடங்களில் உள்ளது.
ரூட் தல பிரச்சினை
பெரும்பாலும் பஸ் ரூட்கள்தான் போர்க்களங்களாக உள்ளன. அந்த ரூட் பஸ்ஸில் யார் பெரியவர் என்பதைக் காட்டும் சண்டையாகவே இது ஆரம்பிக்கிறது.
பஸ்ஸுக்குள் அடிதடி
இதன் காரணமாக பஸ்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம், அடிதடி நடப்பது சகஜமாகி விட்டது. மக்கள்தான் நடுவில் சிக்கி நைந்து போகிறார்கள்.
50 பேர் கைது
இந்த ஆண்டு இதுவரை நடந்த சம்பவங்களில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களைப் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அப்படியும் சண்டைகள் ஓய்வதாக இல்லை.
கல்லூரிக்குள்ளேயே வெட்டு
சில நாட்களுக்கு முன் கீழ்ப்பாக்கம் பச்சையப்பா கல்லூரி வளாகத்திலேயே மாணவர்கள் மோதலில் ஈடுபட்டு சக மாணவரை வெட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அண்ணாசாலையில் கத்திகளுடன் துரத்தல்
இந்நிலையில் இன்று பிற்பகல் 12 மணியளவில் சென்னை அண்ணாசாலையில் இரண்டு கல்லூரி மாணவர்கள் பயங்கர மோதலில் ஈடுபட்டனர். கையில் கத்திகளுடன் ஒரு பிரிவு மாணவர்கள் துரத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
18 கே - 27 எல்
சென்னை அண்ணாசாலை கேசினோ தியேட்டர் அருகில் பிளாக்கர்ஸ் ரோடு சந்திப்பில் நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள் 18 கே மாநகர பஸ்சில் வந்து இறங்கினர். சிறிது நேரத்தில் மாநில கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சிலர் 27எல் அரசு பஸ்சில் அங்கு வந்தனர். இரு தரப்பும் சந்தித்துக் கொண்டபோது பெரும் மோதலாக அது வெடித்தது.
விரைந்து வந்த போலீஸ்
கல்லூரி மாணவர்களின் மோதல் குறித்துத் தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். அப்போது நந்தனம் கல்லூரி மாணவர்களில் 7 பேர் கையில் கத்தியை எடுத்துக் கொண்டு மாநிலக் கல்லூரி மாணவர்களை விரட்டியதால் பரபரப்பு கூடியது. போலீஸாரும் அர்களை விரட்டிச் சென்றனர்.
ஒருவர் சிக்கினார்
இரண்டு போலீஸார் மட்டும் தைரியமாக கத்தியுடன் துரத்திய மாணவர்களை விரட்டிச் சென்றனர். இதையடுத்து மாணவர்கள் பிரிந்து தப்பி ஓடினர். ஒருவர் மட்டும் சிக்கினார். அவரது பெயர் பார்த்தசாரதி. மகாகவி பாரதி நகரைச் சேர்ந்தவர். பிஏ 2ம் ஆண்டு படிப்பவர். அவரிடமிருந்து 2 அடி நீளக் கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
5 பேருக்கு வலைவீச்சு
பார்த்தசாரதியுடன் வந்த மற்ற மாணவர்களான குரு, பிரவீன், திவாகர், மணி, சுதர்சன் ஆகியோரைப் பிடிக்க போலீஸார் வலை விரித்துள்ளனர். அவர்களையும் கைது செய்வோம் என்று போலீஸார் கூறியுள்ளனர்.