‘திருட்டு’ பார்ட் டைம் வேலை... கூலி ரூ. 700... கேரள கல்லூரி மாணவர்கள் 2 பேர் கோவையில் கைது
கோவை: பணத்திற்கு ஆசைப்பட்டு கூலி வாங்கிக் கொண்டு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட இரண்டு கேரளாவைச் சேர்ந்த பொறியியல் மாணவர்களை கோவைப் போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை, தடாகம் சாலையில் உள்ள பொன்னையராஜபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (40), அதே பகுதியைச் சேர்ந்த சீனிவாசன் (40) என்பவருடன் சேர்ந்து தங்க நகை வியாபாரம் செய்து வந்தார்.
இவர்களிடம் பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்த விஜயகுமார் (38), பிரகாஷ் (30) ஆகிய இருவரும் வேலை செய்து வருகின்றனர். கடந்த ஜனவரி 31-ஆம் தேதி விஜயகுமார், பிரகாஷ் இருவரும் சென்னையிலிருந்து 7.25 கிலோ தங்கத்தை வாங்கிக் கொண்டு கோவைக்கு வந்தனர்.
அத்தங்கத்தை பொன்னையராஜபுரத்தில் சீனிவாசன் வீட்டில் ஒப்படைக்க சென்ற போது, முகமூடிக் கும்பல் ஒன்று பிரகாஷையும், விஜயகுமாரையும் அரிவாளால் வெட்டி தங்கத்தை கொள்ளையடித்துச் சென்றது.
இதுதொடர்பாக, வெரைடிஹால் ரோடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில், இக்கொள்ளை சம்பவத்தில் கேரள மாநிலம், சாலக்குடியைச் சேர்ந்த பிஜோ ஜோஸ் (28), ஷிண்டோ (24), ஜிசேஸ் (32), திருச்சூரைச் சேர்ந்த சிஜோ ஜோஸ் (24), பிரஜேஷ் (22) ஆகியோருக்குத் தொடர்பு இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.
அதனைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த கொள்ளையில் முக்கிய நபரான திருச்சூரைச் சேர்ந்த சிவக்குமார் (32) என்பவரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று ஜிசேஸ், பிஜோ ஜோஸ் தவிர மற்ற மூவரும் கோவை ஐந்தாவது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் இதுவரை 6.2 கிலோ தங்கம் மற்றும் லட்சக்கணக்கில் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
போலீசாரின் தொடர் விசாரணையில், கைது செய்யப்பட்ட சிஜோ ஜோஸ், ஷிண்டோ இருவரும் மதுக்கரையை அடுத்துள்ள தனியார் பொறியியல் கல்லூரி மாணவர்கள் என்பது தெரிய வந்துள்ளது.
படித்துக் கொண்டே பகுதி நேர வேலையாக, ரூ.700 கூலிக்கு ஆசைப்பட்டு அவர்கள் இருவரும் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.