பஸ்கட்டண உயர்வை கண்டித்து மறியல்... மதுரையில் 10 மாணவர்கள் சிறையிலடைப்பு!
மதுரை: பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி ஈரோடு, கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மாணவர்களின் போராட்டம் நீடிக்கிறது. மதுரையில் மறியலில் ஈடுபட்ட மாணவர்கள் 10 பேர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மதுரையில் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தியாகராஜர் கல்லூரி மாணவர்கள் 17 பேர் நேற்று தெப்பகுளம் பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். தமிழக அரசு பஸ் கட்டண உயர்வை முழுவதும் திரும்பப் பெற வேண்டும் என்று மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மாலை 6 மணிக்கு விடுவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாணவர்கள் மீது ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் சிறையில் அடைத்தனர்.
மறியலில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு
இதனைத் தொடர்ந்து நேற்று இரவோடு இரவாக மாணவர்கள் 17 பேரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு மாவட்ட நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். மாணவர்களை அவசர அவசரமாக சிறையில் அடைக்க என்ன அவசியம், போதுமான ஆவணங்கள் இல்லாததால் மாணவர்களை சிறையில் அடைக்க நீதிபதி மறுப்பு தெரிவித்ததோடு, 17 பேரையும் காலையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.
7 பேர் விடுதலை
இதனையடுத்து 17 மாணவர்களும் நீதிபதி வீட்டில் இன்று காலை 9 மணியளவில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது 17 பேரில் 7 மாணவர்கள் 18 வயதிற்குட்பட்டவர்களாக இருப்பதால் அவர்களை மத்திய சிறையில் அடைக்க முடியாது என்று நீதிபதி மறுத்துவிட்டார். இதனையடுத்து தெப்பகுளம் போலீசார் 7 மாணவர்களையும் சிறுவர் சீர்திருத்த நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதி முன்பு மாணவர்கள் தங்கள் தரப்பு நியாயத்தை கூறியதையடுத்து மாணவர்கள் 7 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
10 மாணவர்களுக்கு நீதிமன்றக் காவல்
எனினும் எஞ்சிய 10 மாணவர்களும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களை 13ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கும்பகோணத்தில் தள்ளுமுள்ளு
இதே போன்று கும்பகோணம் அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இன்று பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனர். போலீசாரின் அனுமதியை மீறி மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் போலீசார் மாணவர்களிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது, இதனையடுத்து 15 மாணவர்களை போலீசார் குண்டுகட்டாக தூக்கிச் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை விடுவிக்கக் கோரி எஞ்சிய மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோட்டிலும் மாணவர்கள் போராட்டம்
ஈரோடு மாவட்டத்திலும் பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சத்தியமங்கலம் சாலையில் உள்ள சிக்கையா நாயக்கர் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உயர்த்தப்பட்ட பேருந்து கட்டணத்தை முழுவதும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மாணவர்களின் போராட்டம் இரண்டாவது வாரமாக நீடிக்கிறது.