படிக்கப் போவதா? பஸ் கட்டணத்துக்காக வேலைக்குப் போவதா? தன்னெழுச்சியாக வெடிக்கும் மாணவர் கிளர்ச்சி
அரசு பேருந்து கட்டணத்தை இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளதால் கல்லூரி செல்லும் மாணவர்கள் மிகவும் அவதிக்கு ஆளாகியுள்ளனர், இதனால் தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் வெடித்துள்ளது.
Recommended Video
சென்னை : அரசு பேருந்து கட்டணம் இரட்டிப்பாகியுள்ளதால் அன்றாடம் கல்லூரி வந்து செல்வதே கேள்விக்குறியாகியுள்ளதாக மாணவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். படிப்பதற்காக கல்லூரிக்கு வருவதா அல்லது பேருந்துக்கு கட்டணம் செலுத்துவதற்காக வேலைக்கு செல்வதா என்று மாணவர்கள் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளனர்.
டீசல் விலை உயர்வு, பேருந்து உதிரி பாகங்களின் விலை உயர்வை காரணமாக காட்டி தமிழக அரசுப் பேருந்துகளின் கட்டணம் அதிரடியாக உயர்த்தப்பட்டது. இதனால் அன்றாடம் போக்குவரத்துக்கு பேருந்தை பயன்படுத்துவோருக்கான பயணச் செலவு இரட்டிப்பாகியுள்ளது. சனிக்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ள கட்டண உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்கள் வெடித்துள்ளன.
தஞ்சாவூர்,மதுரை, திண்டுக்கல்,நாமக்கல், கோபிசெட்டிப்பாளையம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல பகுதிகளில் 3வது நாளாக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் கேள்வி
மாணவர்கள் தன்னெழுச்சியாக ஈடுபட்டுள்ள இந்த போராட்டத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருகிறது. கூலித் தொழில் செய்யும் பெற்றோர், அன்றாட சம்பளம் வாங்கி பிள்ளைகளை கல்லூரிக்கு அனுப்பும் பெற்றோரின் நிலையை அரசு கவனத்தில் கொள்ளாதது ஏன் என்று மாணவிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
கல்வி பாதிக்கும்
இது வரை கல்லூரிக்கு வந்து செல்ல ரூ.40 செலவான நிலையில், தற்போது இது இரட்டிப்பாகியுள்ளது, இதனால் கல்லூரிக்கு வந்து செல்ல மட்டுமே ரூ. 80 செலவாகிறது என்று கூறுகிறார் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த மாணவி. தானும் தன்னுடைய சகோதரியும் கல்லூரிக்கு வந்து செல்வதாகவும் ஒரு நாளைக்கு இருவருக்குமான பேருந்து செலவே ரூ. 160 என்றால் தினக்கூலி வாங்கும் பெற்றோரின் ஒரு நாள் சம்பளம் ரூ. 200ல் மிஞ்சுவது என்ன என்று கேள்வி எழுப்புகின்றனர்.
கூலித் தொழிலாளிகளின் நிலை
பேருந்து கட்டணத்திற்கே பணத்தை கொடுத்தவிட்டால் தாங்கள் எப்படி சாப்பிட்டு உயிர் வாழ்வது என்று கேள்வி எழுப்பும் மாணவிகள், பெண்கள் கல்லூரிக்கு வந்து படிக்கக் கூடாது வேலைக்குச் செல்ல வேண்டும் என்பதைத் தான் அரசு பேருந்து கட்டண உயர்வின் மூலம் உணர்த்துகிறதா என்று கேள்வி எழுப்புகின்றனர் பாதிக்கப்பட்ட மாணவிகள்.
எங்கள் மீதா சமத்துவது
இலவசங்களாக அள்ளிக் கொடுத்துவிட்டு தற்போது அரசுப் போக்குவரத்து கழகங்களை நடத்த முடியவில்லை என்று கட்டண சுமையை அரசின் மீது சுமத்தும் முடிவை அரசு கைவிட வேண்டும். உடனடியாக பேருந்து கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர் கல்லூரி மாணவிகள்.
உணருமா அரசு?
கல்லூரி மாணவர்கள் வேண்டுமென்றே போராட்டங்களில் ஈடுபடுவதாகவும், கல்லூரி வகுப்பை புறக்கணிப்பதற்காக நடத்தும் வீண் வேலை என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. காரில் வந்து செல்வோருக்கு எங்கள் கஷ்டம் புரியாது, தினமும் வாழ்க்கைக்காக பேராடும் தங்களுக்குத் தான் கட்டண உயர்வின் வலி புரியும் என்று கிராமப் புற மாணவர்கள் சொல்வதிலும் அர்த்தம் இருக்கிறது என்பதை உணருமா அரசு? விவசாயம் பொய்த்து, கூலித் தொழிலுக்கு பெற்றோரின் கஷ்டத்தை உணர்ந்து தான் இந்த மாணவர்கள் போராடுகிறார்கள் என்பது அரசின் கவனத்திற்கு செல்லுமா?