ஜல்லிக்கட்டு.. மதுரையில் வீதிக்கு இறங்கிய கல்லூரி மாணவ, மாணவிகள்- பீட்டாவை தடை செய்ய கோரி போராட்டம்
ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி மதுரையில் கல்லூரி மாணவ, மாணவிகள் கண்களில் கறுப்புத்துணிக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என முழக்கமிட்டு வருகின்றனர்.
மதுரை: ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மதுரையில் கல்லூரி மாணவ-மாணவிகள் கண்களில் கறுப்புத்துணிக் கட்டி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி அவர்கள் முழக்கமிட்டு வருகின்றனர்.
தமிழர் திருநாளாம் பொங்கல் தமிழகத்தில் நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
இதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படாமல் உள்ளது. இந்தாண்டாவது ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக போராட்டங்கள் சூடுபிடித்துள்ளன.
இந்நிலையில் இன்று காலையிலேயே மதுரை காந்தி அருங்காட்சியகம் அருகே ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ,மாணவிகள் திரண்டனர். அவர்கள் ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தி கண்களில் கறுப்பு துணிக்கட்டி போராட்டம் நடத்தினர்.
பீட்டா அமைப்பை தடைசெய்ய வேண்டும் என்றும் மாணவ, மாணவிகள் முழக்கமிட்டனர். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியபடியும் முழக்கமிட்டும் அவர்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
இந்த போராட்டத்தில் அதிகளவு மாணவிகள் மதபேதமின்றி கலந்து கொண்டனர். காலை 7 மணி முதலே திரண்ட மாணவ, மாணவிகளால் மதுரை காந்தி அருங்காட்சியகம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.