ஜல்லிக்கட்டு.. புதுக்கோட்டை கல்லூரி மாணவர்கள் போராட்டம்.. பொதுமக்கள் ஆதரவு
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி புதுக்கோட்டையில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இவர்களுடன் பொதுமக்களும் கலந்து கொண்டு தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுக்கோட்டையில் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டங்களை மாணவர்கள் நடத்தி வருகின்றனர். இந்தப் போராட்டத்தில் பொதுமக்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவித்தனர்.
இந்த ஆண்டு பொங்கலுக்கு ஜல்லிக்கட்டை நடத்தியே தீர வேண்டும் என்று கோரி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டங்களும், போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. புதுக்கோட்டையில் கடந்த 3 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று காலை புதுக்கோட்டை நகரத்தின் மையப் பகுதியில் ஒன்று திரண்ட கல்லூரி மாணவர்கள் ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாக சென்றனர். அவர்களுக்கு ஆதரவாக பொதுமக்களும் பேரணியில் கலந்து போராட்டத்தில் பங்கேற்றனர். அப்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாகவும், மத்திய அரசுக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மாணவர்கள் தொடர்ந்து ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டங்களை நடத்தி வருவதால் புதுக்கோட்டை மன்னர் கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.