ஜல்லிக்கட்டு… கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்.. அலங்காநல்லூரில் போக்குவரத்து பாதிப்பு
ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். பொங்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன.
மதுரை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டங்கள் மதுரை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் தீவிரம் அடைந்து வருகின்றன. கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து அலங்கா நல்லூரில் தனிச்சியம் 4 வழிச்சாலையில் மறியல் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
வரும் சனிக்கிழமை பொங்கல் கொண்டாடப்பட உள்ளநிலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. மத்திய அரசு இதுதொடர்பாக ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை. இது மாணவர்கள், இளைஞர்கள், ஜல்லிக்கட்டு ஆர்வலர்களிடம் கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், இன்று அலங்காநல்லூரில் உள்ள தனிச்சியம் 4 வழிச்சாலையில் கல்லூரி மாணவர்கள் ஒன்றிணைந்து சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தமுக்கம் மைதானத்தில் பேரணி, 60 கிராமங்களில் கடையடைப்பு என பல்வேறு இடங்களில் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகின்றன.