செப்டம்பர் மூன்றாவது வாரம் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை! - பிரவீண் குமார்
சென்னை: வரும் செப்டம்பர் 3வது வாரத்தில் வாக்காளர்களுக்கு வண்ண அடையாள அட்டை வழங்கும் பணி தொடங்கும் என்று தேர்தல் அதிகாரி பிரவீண் குமார் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களுக்கு, தமிழக தலைமைத் தேர்தல் ஆணையர் பிரவீன்குமார் அளித்த பேட்டி:
தமிழகத்தில் பாராளுமன்றத் தேர்தலுக்காக 845 பேர் போட்டியிட்டனர். இவர்களில் சுமார் 150 பேர் தேர்தல் செலவுக் கணக்கை, மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் சமர்ப்பிக்கவில்லை. தற்போது இவர்களுக்கு அதற்கான நோட்டீஸ் அனுப்பப்பட்டு விளக்கம் கேட்கும் நடவடிக்கை தொடங்கியுள்ளது.
செலவுக் கணக்கு
இதுவரை 15-க்கும் மேற்பட்டோருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. உடல் சுகவீனம் போன்ற உண்மையான காரணங்கள் கூறப்பட்டால் அதை இந்திய தேர்தல் கமிஷன் ஏற்றுக்கொள்ளும்.
அதுபோல் சரியான தேர்தல் செலவுக் கணக்கை காட்டாமல் போனாலும் அதுதொடர்பாகவும் நோட்டீசு பிறப்பிக்கப்படும். தமிழகத்தில் ஒரு வேட்பாளர் தாக்கல் செய்துள்ள செலவுக் கணக்கு, தேர்தல் கமிஷனின் செலவுக் கணக்கோடு ஒத்துப்போகவில்லை. அவரது பெயரை இப்போது குறிப்பிட விரும்பவில்லை.
புதிய வாக்குச் சாவடிகள்
தமிழகத்தில் 60 ஆயிரத்து 418 வாக்குச் சாவடிகள் உள்ளன. நகராட்சிகளில் ஒரு வாக்குச்சாவடிக்கு 1,400 பேரும், கிராமப்புறங்களில் ஒரு வாக்குச்சாவடிக்கு 1,200 பேரும் என வாக்காளர் உச்சவரம்பை நிர்ணயித்து வாக்குச் சாவடிகளை ஒழுங்குபடுத்த உள்ளோம்.
இதனால் வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 5 முதல் 10 சதவீதம் வரை உயரும். புதிய வாக்குச்சாவடிகளை தேர்வு செய்யவும், அவற்றுக்கான மக்கள் கருத்தைப் பெறவும் பணிகள் நடக்கின்றன.
மாணவ தூதர்கள்
தமிழகத்தில் சுமார் 1,100 கல்லூரிகளில், ஒவ்வொரு கல்லூரியிலும் தேர்தல் கமிஷன் தனக்கான தூதராக சில மாணவர்களை நியமித்தது. இதில் கல்லூரியை முடித்துவிட்டு சிலர் சென்றிருக்கலாம்.
எனவே, அந்த இடத்தில் புதிய மாணவ தூதர்கள் நியமிக்கப்படுவர். அவர்கள் மூலம் 18 வயது பூர்த்தியான மாணவர்கள் கண்டறியப்பட்டு, வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவர். இதற்காக கலெக்டருக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பித்துள்ளோம்.
வண்ண அடையாள அட்டை
வாக்காளர் பட்டியலில் புதிதாக 11 லட்சம் பேர் சேர்க்கப்பட்டனர். அவர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது. இம்மாத இறுதியில் வழங்குவதற்கு திட்டமிட்டு இருந்தோம். அடையாள அட்டை தயாரிப்புக்கான டெண்டர் முடிவு செய்யப்பட்டுவிட்டாலும், தயாரிப்புப் பணி இன்னும் தொடங்கவில்லை.
செப்டம்பர் 3வது வாரம்
வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை போலியாக தயாரிக்க முடியாதபடி சில ரகசிய குறியீடுகளை அதில் சேர்க்க வேண்டியதுள்ளது. அதன் பிறகு இந்திய தேர்தல் கமிஷனின் ஒப்புதலைப் பெற்று அவை தயாரிக்கப்படும். வரும் செப்டம்பர் 3-வது வாரத்தில் புதிய வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள் வழங்கும் பணி தொடங்கும்.
நான் இந்தப் பதவியில் இருந்து விலகும் முடிவில் மாற்றம் செய்யவில்லை. எனது விஷயத்தில் இந்திய தேர்தல் கமிஷன் என்ன முடிவு எடுக்கவுள்ளது என்பது தெரியவில்லை.
-இவ்வாறு அவர் கூறினார்.