சீக்கிரம் வாங்க, எனக்கு நல்ல ஃபிரண்ட் வேணும்.. சோவுக்கு ஜெ. அழைப்பு விடுத்த அந்த தருணம்!
சோ உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தபோது அவரைப் பார்க்கப் போயிருந்த முதல்வர் ஜெயலலிதா, சீக்கிரம் வாங்க என்று கூறி அழைப்பு விடுத்தது இப்போது மரணத்தில் நிஜமாகியிருக்கிறது.
சென்னை: சில விஷயங்கள் தற்செயலாகத்தான் இருக்கும். ஆனால் அது பின்னர் வரலாறாக மாறும். அப்படிப்பட்ட விஷயங்களில் ஒன்றுதான் மறைந்த முதல்வர் ஜெயலலிதா, இன்று அதிகாலை மறைந்த சோ ராமசாமியுடன் பேசிய ஒரு பேச்சு.
முதல்வர் ஜெயலலிதா மறைந்த 2 நாட்களிலேயே சோவும் பிரிந்து போய் விட்டார். ஜெயலலிதாவின் உற்ற தோழராக, நல்ல ஆலோசகராக, நலம் விரும்பியாக கடைசி வரை இருந்தவர் சோ. இந்த நிலையில் ஜெயலலிதா மறைந்த நிலையில் சோவும் அவரைப் பின்பற்றி சென்றிருப்பது பலரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த நிலையில், சோ உடல் நலம் இல்லாமல் இருந்தபோது அவரைப் பார்க்கச் சென்ற ஜெயலலிதா பேசிய பேச்சு இன்று நினைத்துப் பார்க்க வைக்கிறது.
நல்ல நண்பர்
சோவை எப்போதுமே தனது நல்ல நண்பராகத்தான் ஜெயலலிதா பார்த்து வந்துள்ளார். மேலும் அவர் புத்திசாலி என நினைத்த ஒரே நபர் சோ மட்டும்தான். அதேபோலத்தான் சோவும், ஜெயலலிதா மீது மிகுந்த அன்பும், நட்பும் பாராட்டி வந்தார். ஜெயலலிதாவுக்கு சிக்கல் வந்தபோதெல்லாம் அவருக்கு ஆலோசனை கொடுத்தவர் சோதான்.
துக்ளக் தர்பார்
சோ நடத்தி வந்த துக்ளக் பத்திரிகை திமுகவை கடுமையாக சாடுவது வழக்கம். அதிமுகவை ஒருபோதும் பாராட்டத் தவறியதும் இல்லை. இது உலகம் அறிந்த விஷயம்.
கருப்பையா பேச்சுக்குப் பிறகும்
இருப்பினும் சில மாதங்களுக்கு முன்பு பழ. கருப்பையா அதிமுக ஆட்சி குறித்து துக்ளக் ஆண்டு விழாவில் மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசியது ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சி அளித்தது. அதன் பின்னர் சோவுடன் பேசுவதைக் கூட சில காலம் அவர் நிறுத்தி விட்டார்.
உடல் நலக்குறைவு கரைத்தது
ஆனால் சோவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை அறிந்து ஜெயலலிதா துடித்துப் போனார். அவரைப் போய்ப் பார்த்து நலம் விசாரித்தார்.
சீக்கிரம் வாங்க
அப்போது சோவிடம், சீக்கிரமா திரும்பி வாங்க, எனக்கு உங்களைப் போன்ற நண்பர் தேவை என்று சிரித்தபடி கூறினார் ஜெயலலிதா.
சோகம்
ஜெயலலிதா அப்படிக் குறிப்பிட்டது இப்போது உண்மையாகவே நடந்து விட்டது. ஜெயலலிதா இறந்த சில மணி நேரங்களிலேயே அவரைத் தேடிப் போய் விட்டார் சோ.