மழை கொட்டும்னு பார்த்தா பனி கொட்டோ கொட்டுன்னு கொட்டுதே பாஸு...!
தமிழகத்தில் வட கிழக்குப் பருவமழை பொய்த்துள்ள நிலையில் குளிர் அதிகரித்துள்ளது. சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பனி அதிகரித்துக் காணப்படுவதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.
சென்னை: சென்னையில் இன்று அதிகாலையில் வழக்கத்தை விட அதிக அளவில் பனி கொட்டியதால் மக்கள் நடுங்கிப் போய் விட்டனர். சென்னையில் மட்டுமல்லாமல் தமிழகத்தின் அனேக இடங்களில் கடந்த சில நாட்களாக பனி அதிகரித்து காணப்படுகிறது.
மழை கொட்டித் தள்ள வேண்டிய நேரத்தில் இப்படி பனி கொட்டுவது மக்களை குழப்பமடைய வைத்துளது. பனிக்காலத்தில் வரும் ஜலதோஷம், காய்ச்சல் உள்ளிட்டவையும் அதிகரித்து வருகிறது.
தமிழகத்தில் இது மழைக்காலம். வட கிழக்குப் பருவ மழை பெய்து கொண்டிருக்க வேண்டிய கால கட்டம் இது. போன வருடம் மிகப் பெரிய வெள்ளத்தை தமிழகம் சந்தித்து திண்டாடிக் கொண்டிருந்தது. ஆனால் இந்த வருடம் நிலைமை அப்படியே தலை கீழாக மாறியுள்ளது.
மழையே இல்லை
அக்டோபர் 2வது வாரத்தில் தொடங்கியிருக்க வேண்டி பருவ மழை மிகவும் தாமதமாக தொடங்கியது. ஆனால் தொடங்கிய குறுகிய நாட்களிலேயே மழை நின்று போய் விட்டது. இன்று வரை மழை இல்லாமல் மக்கள் பெரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.
71 சதவீத மழை குறைவு
அக்டோபர் 1ம் தேதி முதல் இப்போது வரை தமிழகத்தில் 71 சதவீத அளவுக்கு குறைந்த அளவே மழை பெய்துள்ளது. ஆண்டுதோறும் சராசரியாக நமக்கு 32 செமீ அளவுக்கு வட கிழக்குப் பருவ மழை கிடைக்கும். ஆனால் இதுவரை 10 செமீ மழைதான் பெய்துள்ளது.
கடும் குளிர்
மழை பெய்வதற்குப் பதில் குளிர் வீசி வருகிறது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஊட்டி கொடைக்கானல் போல மாறிக் காணப்படுகிறது. பகலில் குளிர்கிறது என்றால் இரவில் கடும் குளிராக காணப்படுகிறது.
வெள்ளைப் பனி
ஊட்டியில் அடர்ந்த பனி கொட்டத் தொடங்கி விட்டது. இதனால் அங்கு சுற்றுலாப் பயணிகள் நடுங்கும் குளிரில் ஊரைச் சுற்றிப் பார்க்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இனி மழை வர வாய்ப்பில்லை என்று உள்ளூர்க்காரர்கள் கூறுகிறார்கள்.
சென்னையில் பனி மூட்டம்
இன்று அதிகாலையில் சென்னையில் வழக்கத்தை விட கடும் குளிராக இருந்தது. வெளியில் பனி மூட்டமும் அதிகமாக இருந்தது. கிட்டத்தட்ட மார்கழி மாத பனி போல இருந்ததால் மழைக்காக ஏங்கி நிற்கும் சென்னை மக்களுக்கு இது கூடுதல் கவலையையே ஏற்படுத்தியுள்ளது.
வட மாநில குளிர்காற்று காரணமாம்
தமிழகத்தில் வழக்கத்தை விட அதிகமான குளிர் வீசுவதற்கு காரணம் வட மாநிலங்களில் இப்போது குளிர் காலம். அங்குள்ள குளிர் காற்று தெற்கு நோக்கி நகர்ந்ததால் இங்கு அதிகமாக குளிர்கிறதாம். மேலும் பகலிலும் வெயிலின் தாக்கத்தை இது குறைத்துள்ளதாம்.
48 மணி நேரத்தில் மழை வரலாம்
இருப்பினும் தற்போது தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் எஸ்.பாலச்சந்திரன் கூறுகையில், தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இந்த தாழ்வு பகுதி 48 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுபெற்று வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து தமிழக கடலோர திசைகளில் நகரக்கூடும் என்று கூறியுள்ளார்.
1ம் தேதி நல்ல சேதி வருமா?
1ம் தேதி முதல் தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்யலாம் என்று கணிக்கப்பட்டிருப்பதால் மக்களின் கவனம் வானத்தின் மீதும், வானிலை மையத்தின் மீதும் திரும்பியுள்ளது. நல்ல சேதி வருமா...?