அக். 15க்குள் ஆட்டோ கட்டணத்தை திருத்த கெடு.. கூடுதலாக வசூலித்த 1,595 ஆட்டோக்கள் பறிமுதல்
சென்னை: சென்னையில் ஆட்டோ மீட்டரில் புதிய கட்டணம் திருத்தம் செய்ய கால அவகாசம் 15-ந்தேதியுடன் முடிவடைகிறது. இதுநாள் வரை திருத்தம் செய்யாமலும், புதிய கட்டண அட்டை இல்லாமலும் இயக்கப்பட்ட 1,595 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழக அரசு, ஆட்டோக்களுக்கு புதிய திருத்திய கட்டணத்தை கடந்த ஆகஸ்ட் 25-ந்தேதி அறிவித்து, அன்றைய தினமே அமலுக்கு கொண்டு வந்துள்ளது. அதன்படி சென்னையில் ஓடும் ஆட்டோக்களுக்கு முதல் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கான ஆட்டோ ரிக்ஷா கட்டணம் 25 ரூபாய் என்றும், ஒவ்வொரு கூடுதல் கிலோ மீட்டருக்கு கட்டணம் 12 ரூபாய் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2 லட்சத்து 14 ஆயிரம் ஆட்டோ ரிக்சாக்கள் உள்ளன. இவற்றில் சென்னை பெருநகரில் மட்டும் 71 ஆயிரத்து 470 ஆட்டோக்கள் ஓடுகின்றன. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆட்டோ ரிக்ஷாக்களில் பயணிப்போர் கூடுதலாக 50 சதவீதம் இரவு கட்டணமாக செலுத்த வேண்டும். காத்திருப்போர் கட்டணம், ஒவ்வொரு 5 நிமிடங்களுக்கு 3 ரூபாய் 50 காசு என்ற வீதத்தில், ஒரு மணி நேரத்திற்கு 42 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
திருத்தி அமைக்கப்பட்ட அட்டையை செப்டம்பர் 15-ந்தேதி முதல் அனைத்து ஆட்டோ டிரைவர்களுக்கும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அட்டையை பெற்ற ஆட்டோ டிரைவர்கள், பயணிகளிடம் காண்பிப்பதில்லை. பழைய முறைப்படி வசூல் செய்வதாக போக்குவரத்து துறைக்கு புகார்கள் வந்தன.
அதன்படி கடந்த செப்டம்பர் 16-ந்தேதி முதல் நேற்று வரை 35,500 ஆட்டோக்களை போலீசார் பரிசோதனை செய்தனர். இதில் 1,595 ஆட்டோக்களில் மீட்டரில் புதிய கட்டணம் திருத்தம் செய்யப்படாததால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பிட்ட தேதியில் மீட்டர் திருத்தம் செய்யாதது, ரயில் நிலையம், பஸ் நிலையம் போன்ற பயணிகள் அதிகம் வரும் இடங்களில் காலை நேரங்களில் மீட்டர் போடாதது, மீட்டரில் தில்லு முல்லு செய்வது பயணிகள் மூலம் தெரியவந்தால், ஆட்டோ உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், ஆட்டோ டிரைவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்தை ஆட்டோ மீட்டரில் திருத்தம் செய்ய வரும் 15-ந்தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இதற்குள் அனைத்து ஆட்டோ டிரைவர்களும் மீட்டரில் மாற்றம் செய்து அரசுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இவ்வாறு போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.