ஒரத்தநாடு அருகே புத்தாண்டு கொண்டாடியவர்கள் மீது கொலை வெறி தாக்குதல்..மக்கள் சாலை மறியல்
ஒரத்தநாடு அருகே புத்தாண்டு விழா கொண்டாடியவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது.
ஒரத்தநாடு : ஒரத்தநாடு அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் இரு தரப்பினருக்கிடையே அடிதடி மோதல் நேற்றிரவு நடந்து உள்ளது. இந்சம்பவம் குறித்து போலீஸார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் சாலை மறியல் நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலப்பட்டு - தெற்கு குடிக்காடி கிராமத்தில் புத்தாண்டு விழாவையொட்டி ஒரு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் வண்ண தோரணங்கள், பலூன் கட்டி கொண்டாடி உள்ளனர். இதனை அதே பகுதியில் உள்ள வேறு தரப்பை சேர்ந்த இளைஞர்கள் தோரணங்களை கிழித்து வீசி சேதப்படுத்தி உள்ளனர். இதை எதிர்த்த சில இளைஞர்கள் மீதும் தாக்குதல் நடத்தி உள்ளனர்.
இதையடுத்து அதிகாலை 2 மணியளவில் புத்தாண்டு கொண்டாடிய இளைஞர்கள் வசிக்கும் பகுதிக்கு சென்ற 80 பேர் அடங்கிய மற்றொரு கும்பல் அங்கு அவர்களது உடமைகளை அடித்து சூறையாடியது. மேலும் அவர்களது சாதியை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டியும், மக்களை அடித்தும் துன்புறுத்தி உள்ளனர்.
இந்த தாக்குதலில் 8 பேர் காயமடைந்து உள்ளனர். 15 இரு சக்கர வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்து வருகின்றனர்.