ஈரோட்டில் இரு மதத்தினரிடையே அடுத்தடுத்து மோதல்.. 3 பேர் கைது.. தொடர் மோதலால் பதற்றம்
ஈரோட்டில் இருமதத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு: இருமதத்தினரிடையே ஏற்பட்ட மோதலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மோதல் சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்களம் அருகே உள்ள பகுதம்பாளையத்தை சேர்ந்தவர் பிரதீபா. 40 வயதான கிறிஸ்தவ பெண் ஆவார்.
இவரது கணவர் பால் ஸ்டீபன் அப்பகுதியில் உள்ள தேவாலயத்தில் பாதிரியாராக உள்ளார். பிரதீபா கடந்த ஞாயிற்று கிழமை தனது வீட்டில் கூட்டு பிரார்த்தனை செய்தார்.
இருமதத்தினர் மோதல்
அப்போது அங்கு வந்த இந்து முன்னணியை சேர்ந்த 5 பேர் பிரதீபா மீது சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பதிலுக்கு பிரதீபா தரப்பும் தாக்குதல் நடத்தியது. இதில் இரு தரப்பினரும் பலத்த காயமடைந்துள்ளனர்.
இந்து முன்னணி குற்றச்சாட்டு
தாக்குதல் குறித்து பவானிசாகர் போலீசார் 2 வழக்குகளை பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் இந்து முன்னணியினர் மீது தாக்குதல் நடத்தியதாக இந்து முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக போலீஸில் புகாரும் அளித்துள்ளார்.
2 முறை அடுத்தடுத்து மோதல்
காலையில் 10 .20 மணிக்கு ஏற்பட்ட தகராறை தொடர்ந்து மதியம் 2 மணிக்கு பாதிரியார் வீட்டிற்கு திரும்பிய பின்னர் மீண்டும் இரு தரப்பினரும் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
இருதரப்பினரும் கைது
இருதரப்பு புகாரின் அடிப்படையில் அஜித், ஜார்ஜ், ஞானபிரசாத் ஆகிய மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த மோதலில் இரு தரப்பினருக்கும் ரத்தக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாக சத்தியமங்களம் டிஎஸ்பி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
கையை மீறி போய்விட்டது
மேலும் சத்தியமங்களம் பகுதியில் இரு மதத்தினர் இடையே ஞாயிற்றுக்கிழமைகளில் மோதல் நடைபெறுவது வழக்கமாகிவிட்டதாகவும் டிஎஸ்பி பழனிச்சாமி தெரிவித்தார். ஆனாலும் போலீசார் மதப்பிரச்சனைகளை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாக கூறிய பழனிச்சாமி, ஞாயிற்றுக்கிழமை நடந்த தகராறு கையை மீறி போய்விட்டதாக கூறினார்.
முன்ஜாமீன் கோரி மனு
இதனிடையே கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதீபா மற்றும் அவரது கணவர் ஸ்டீபன் ஆகியோர் முன்ஜாமீன் கோரி நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.