தமிழகத்தில் தேய்ந்தே போன கம்யூனிஸ்ட் – மொத்த டெபாசிட்டும் காலி
சென்னை: தமிழகத்தில் தேய்ந்து போன கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா 0.5 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்று பெரும் தோல்வி அடைந்துள்ளன.போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட்டும் காலி.
2009 ஆம் ஆண்டு நடந்த லோக்சபா தேர்தலின்போது தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இடம் பெற்றிருந்தன. அத்தேர்தலில் இரு கட்சிகளும் தலா ஒரு இடத்தில் வென்றன.
அதேசமயம் 2004 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் இக்கட்சிகள் திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்தன. அத்தேர்தலில் இரு கட்சிகளும் தலா 2 இடங்களில் வென்றிருந்தன. அத்தேர்தலில் அதிமுக கூட்டணி முட்டை எடுத்தது. திமுக கூட்டணி அத்தனை இடங்களையும் வென்றது.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2,19,866 வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. அதாவது இது வாக்கு சதவீதத்தில் 0.5 மட்டுமே ஆகும். அதேபோல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2,20,614 வாக்குகளை அதாவது 0.5 சதவீத வாக்குகளையே பெற்றுள்ளது
இந்தத் தேர்தலில் கடைசி வரை அதிமுக கூட்டணியில் இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இரு கம்யூனிஸ்ட் கட்சிகளையும் அதிரடியாக கழற்றி விட்டு விட்டார் முதல்வர் ஜெயலலிதா. இதனால் தனித்துப் போட்டியிடும் நிலைக்கு அவை தள்ளப்பட்டன.
இதையடுத்து இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் தலா 9 இடங்களில் போட்டியிட்டன. ஆனால் 9 தொகுதிகளிலும் இரண்டு கட்சிகளும் யாருக்கும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை, வெற்றியும் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.