மத்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் ஒரு வார பிரசார இயக்கம் – தலைவர்கள் அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் ஒரு வாரம் பிரசார இயக்கம் நடத்த இருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்ட் லெனின் பிரிவின் மாநில செயலாளர் எஸ்.பாலசுந்தரம் ஆகியோர் நேற்று கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, "மத்திய அரசினுடைய வகுப்புவாத நடவடிக்கைகளை எதிர்த்தும், நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும் மற்றும் சமூக பிரச்சினைகள் மீதும் நாடு தழுவிய அளவில் பிரசார இயக்கம் நடத்துவதென டெல்லியில் கூடிய இடதுசாரி கட்சிகள் தெரிவித்தன.
அகில இந்திய அளவிலான இயக்கத்தின் ஒரு பகுதியாக தமிழகத்தில் வருகிற டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பிரசார இயக்கம் நடத்துவதென முடிவெடுக்கப்பட்டுள்ளது.
நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு ஆட்சி பொறுப்பேற்றத்தில் இருந்து நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கைகளை அமலாக்குவதோடு, ஆர்.எஸ்.எஸ் தலைமையிலான சங்பரிவார் அமைப்புகள் மதவெறியூட்டி மதமோதலை உருவாக்கக் கூடிய வகுப்புவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளன.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதக் கலவரங்களை உருவாக்கி வருகிறது. சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருகின்றன. பெண்கள் மீதான பாலின ஒடுக்குமுறைகளும், தலித் மக்கள் மீதான வன்கொடுமை சாதிய ஒடுக்குமுறைகளும் அதிகரித்து வருகின்றன.
நவீன தாராளமய பொருளாதாரக் கொள்கை அமலாக்கம் துவங்கிய பிறகு அரசியல்வாதிகள், பெருமுதலாளிகள், அதிகாரிகள் இணைந்து நடத்தும் ஊழல்கள் அதிகரித்து வருகின்றன. இயற்கை வளம் கொள்ளை போகிறது.
மேற்கண்ட, பிரச்சினைகள் மீது தமிழகம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகளின் சார்பில் டிசம்பர் 8 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை தெருமுனை கூட்டம், அரங்கக் கூட்டம், பொதுக்கூட்டங்கள் போன்ற முறையில் ஒருவார காலம் பிரசார இயக்கம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
மக்களின் அரசியல், சமூக, பொருளாதார கோரிக்கைகள் மீதும், ஊழலை எதிர்த்தும் இடதுசாரிக் கட்சிகள் நடத்தவுள்ள இயக்கத்திற்கு ஆதரவு தருமாறு அனைத்துப் பகுதி மக்களுக்கும் இடதுசாரிக் கட்சிகள் வேண்டுகோள் விடுக்கின்றன" என்று தெரிவித்துள்ளனர்.