சென்னையில் கடந்த வெள்ளத்தில் மூழ்கிய இடங்கள் இந்த மழைக்கு எப்படி இருக்கிறது தெரியுமா?
சென்னையில் 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக மூழ்கிய இடங்கள் எல்லாம் இந்த மழையிலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: சென்னையில் நேற்று மாலையில் இருந்து கொடூரமாக மழை பெய்து வரும் சூழ்நிலையில் மழை காரணமாக சென்னையின் பெரும்பாலான ஏரிகள் நிரம்பி இருக்கின்றன. இதுவரை பெய்த மழை காரணமாக சென்னையில் இருக்கும் 16 ஏரிகளில் முக்கியமான ஏரிகள் அனைத்தும் பெருமளவில் நிரம்பிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் 2015ல் ஏற்பட்ட வெள்ளத்தின் போது சென்னையில் மோசமாக பாதிக்கப்பட்ட முக்கால்வாசி இடங்கள் இந்த மழையிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஒரே நாளில் பல இடங்கள் மழை நீரில் முழுகி இருக்கிறது.
சென்ற வெள்ளத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட அடையார், சைதாப்பேட்டை பாலம், மெரினா, வட சென்னை பகுதிகள் என முக்கால்வாசி பகுதிகளில் இந்த முறையும் மோசமாக வெள்ளம் வந்து இருக்கிறது.
2015ஐ நினைவுபடுத்தும் மழை
சென்னையில் கடந்த மூன்று நாட்களாக மிகவும் மோசமான அளவில் மழை பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் சென்னையில் 30 செ.மீ மழை பெய்து இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. சென்னையில் பெய்யும் இந்த மழை 2015ல் நடந்த மிக மோசமான வெள்ள பாதிப்பை அனைவருக்கும் ஞாபகப்படுத்துகிறது. சென்னையில் 2015 ல் நடந்த வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பல இடங்கள் இந்த மழையிலும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. பல இடங்கள் இன்னும் மோசமாக பாதிக்க காத்துக்கொண்டு இருக்கின்றன.
செம்பரம்பாக்கம் எப்படி இருக்கிறது
சென்ற 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்திற்கு முக்கிய காரணம் செம்பரம்பாக்கம் ஏரி ஆகும். அந்த ஏரியில் நீர் இருப்பு அதிகம் ஆகி நொடிக்கு 30 ஆயிரம் கன அடி நீர் அதில் இருந்தது. அந்த நீர்தான் மொத்தமாக திறந்து விடப்பட்டு வெள்ளம் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிலையில் அந்த செம்பரம்பாக்கம் ஏரி இந்த முறையும் வேகமாக நிரம்பி வருகிறது. 3,645 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி இன்று இரவும், நேற்று போல் மோசமாக மழை பெய்தால் கண்டிப்பாக நிரம்பும் என்று கூறப்படுகிறது. மேலும் சென்ற முறை போல இல்லாமல் இந்த முறை சரியான நேரத்தில் தண்ணீரை திறந்து விட வேண்டும்.
அடையாரில் வெள்ளம்
2015ல் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் அனைத்தும் இந்த அடையார் ஆற்றின் வழியாகத்தான் ஓடியது. அப்போது பெய்த மழையின் காரணமாக இந்த ஆறு நிரம்பி வழிந்தது. அதில் செம்பரம்பாக்கம் தண்ணீரும் சேர்ந்ததால் மிகவும் மோசமாக தண்ணீர் நகரத்திற்குள் சென்றது. இந்த நிலையில் இந்த மழைக்கும் அடையார் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. நேற்று இங்கு பெய்த மழை காரணமாக அடையார் ஆறு நிரம்பியது. இன்றும் இந்த மழை தொடர்ந்தால் மொத்தமாக தண்ணீர் வெளியேறும். அதிக மழை காரணமாக வெள்ளம் ஊருக்குள் எந்த நேரமும் புகுந்து வரலாம் என மக்கள் பயந்து வருகின்றனர்.
அடையார் மலர் மருத்துவமனை
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மற்றொரு முக்கியமான இடம் அடையார் மலர் மருத்துவமனை. அடையார் ஆற்றில் இருந்து வேகமாக வெளியேறிய வெள்ளம் காரணமாக அந்த பகுதியில் இருந்த முக்கியமான நிறுவனங்கள் எல்லாம் பாதிக்கப்பட்டது. அதில் மலர் மருத்துவமனையும் ஒன்று ஆகும். இந்த நிலையில் இந்த மழையிலும் இந்த மருத்துவமனை பாதிக்க வாய்ப்பு இருக்கிறது. இப்போது வரை அங்கு முழங்கால் அளவு தண்ணீர் இருக்கிறது. அடையார் ஆறு நிரம்பும் பட்சத்தில் அங்கு அதிக வெள்ளம் ஏற்படலாம்.
மொத்தமாக மூழ்கிய மெரினா
கடந்த வெள்ளத்தில் மெரீனாவும், அங்கு இருந்த மீனவ குடும்பங்களும் அதிகம் பாதிக்கப்பட்டன. மெரினா முழுக்க முட்டி அளவுக்கு தண்ணீர் தேங்கி இருந்தது. இந்த முறையும் இந்த நிகழ்வு மெரினாவில் நடந்து இருக்கிறது. நேற்று பெய்த 30 செ.மீ கனமழையால் தற்போது மெரினாவில் பெரிய அளவில் தண்ணீர் தேங்கி இருக்கிறது. தண்ணீரை கடலில் கலந்து வெளியேற்றும் பணி நடந்து வருகிறது.
சைதாப்பேட்டை பாலம்
சென்ற 2015 வெள்ளத்தின் கோரத்தை ஒரே புகைப்படத்தில் காட்ட வேண்டும் என்றால் கண்டிப்பாக சைதாப்பேட்டை பாலத்தின் படத்தை காட்டலாம். இந்த படம் அப்போது அதிக அளவில் வைரல் ஆனது. அப்போது செம்பரம்பாக்கத்தின் தண்ணீர் பாலத்திற்கும் மேலாக கடந்து சென்றது. பாலமே முழுகி இருந்தது . இந்த முறை அது போன்ற அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை என்றாலும் மிகவும் அதிக அளவில் பயமுறுத்தும் அளவுக்கு அங்கு தண்ணீர் சென்று கொண்டு இருக்கிறது.
சுத்தம் ஆகுமா கூவம்
சென்ற வெள்ளத்தில் தண்ணீர் வேகமாக கூவம் வழியாக அடித்து செல்லப்பட்டதால் ஒரே நாளில் மொத்த கூவமும் சுத்தம் ஆனது. கூவத்தில் இருந்த மொத்த குப்பையும் கடலோடு கலந்தது. ஆனால் இந்த இரண்டு ஆண்டுகளில் கூவம் மீண்டும் பழைய நிலைக்கு சென்று அசுத்தம் ஆகிவிட்டது. கூவத்தில் தற்போது அதிக அளவில் தண்ணீர் சென்று வருகிறது. இன்னும் அதிக மழை பெய்தால் கூவம் கண்டிப்பாக சுத்தம் அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த வெள்ளத்தில் இருந்து அரசும், மக்களும் இன்னும் பாடம் கற்கவில்லை என்பது இவற்றிலிருந்து புலப்படுகிறது.