ரயில் பயணமே பரவாயில்லை போலயே!... விழி பிதுங்க வைக்கும் பேருந்து கட்டணம்!
தமிழக அரசு உயர்த்தியுள்ள பேருந்து கட்டணத்தை பார்க்கும் போது ரயில் கட்டணமே பரவாயில்லை இனி பயணிகள் பர்சுக்கு சூடு வைக்காத பயணம் என்றால் அது ரயில் பயணம் தான் என்ற நிலைக்கு தள்ளியுள்ளது அரசின் அதிரடி கட்ட
சென்னை : தமிழகத்தில் அதிரடியாக 70 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ள உள்ளூர் மற்றும் புறநகர் பேருந்து சேவையின் அதிரடி கட்டண உயர்வு மக்களை விழி பிதுங்க வைத்துள்ளது. இனி நடுத்தர வர்க்க மக்களின் பர்சுக்கு சூடு வைக்காத பயணம் என்றால் அது முன்கூட்டியே திட்டமிட்டு பதிவு செய்யப்படும் ரயில் பயணமே சிறந்தது என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் மக்கள். ஏனெனில் பேருந்து கட்டணத்தை விட ரயில் கட்டணம் குறைந்த அளவே இருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ளூர் மற்றும் புறநகர் பேருந்துகளின் கட்டணம் என்பது அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது. புதிய கட்டணத்தின் படி 200 கி.மீட்டருக்கு அதிகமான தூரம் பயணிக்கும் மக்கள் இனி ரூ. 100 முதல் ரூ. 200 வரை அதிக கட்டணம் செலுத்த வேண்டும்.
புறநகர்ப்பகுதிகளில் கட்டண உயர்வு ரூ. 42 பைசாவில் இருந்து ரூ. 60 பைசாவாக அதிகரித்துள்ளது. இதே போன்று சமயம், எப்ஸ்பிரஸ், டீலக்ஸ் பேருந்துகளில் கிலோ மீட்டருக்கு ரூ. 56 பைசாவில் இருந்து கட்டணம் ரூ. 80 ஆக உயர்ந்துள்ளது.
டீலக்ஸ் பேருந்தில் எவ்வளவு?
இதே போன்று சூப்பர் டீலக்ஸ் பேருந்துகளில் ஒரு கிலோ மீட்டருக்கு 60 பைசாவில் இருந்து 90 பைசாவாக கட்டணம் உயர்ந்துள்ளது. அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளில் 110 ஆகவும் கட்டண உயர்வு விகிதம் மாற்றப்பட்டுள்ளது.
இரண்டு மடங்கு செலவு
சுருக்கமாக சொல்லப் போனால் இது வரை கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் சென்று வரவே குறைந்த பட்சமாக மொத்தம் ரூ. 33 செலவு செய்திருப்போம். ஆனால் இனி இரண்டு மடங்கு செலவு செய்ய வேண்டி இருக்கும். அதாவது கோயம்பேடு - தாம்பரம் ரூ. 33, மற்றும் தாம்பரம் - கோயம்பேடு ரூ. 33 என்று செலவு இரட்டிப்பாகியுள்ளது.
திணறும் மக்கள்
மாதத்திற்கு கோயம்பேட்டில் இருந்து தாம்பரம் வந்து செல்ல இது வரை ரூ. 850 செலவழித்திருந்தால் இனி அதை இரண்டு மடங்காக ரூ. 1650 என செலவு செய்ய வேண்டி வரும். மாத பாஸ்க்கான கட்டணத்தை அரசு எந்த அளவில் நிர்ணயம் செய்கிறது என்பதைப் பொருத்தே அன்றாடம் பேருந்து பயணம் மேற்கொள்வோரின் சுமை குறையுமா, இல்லையா என்பது தெரிய வரும்.
ரயில் பயணத்திற்கு மாற்றம்
சென்னை புறநகர் ரயில்களைப் பொறுத்த வரையில் கட்டணமானது சென்னை பீச் ஸ்டேஷனில் இருந்து தாம்பரம் வரை பொது பெட்டியில் பயணிக்க அதிகபட்சமாக ரூ. 30 செலவு செய்தாலே போதும். இதுமட்டுமின்றி சீசன் பாஸ்க்கான கட்டணம் என்பது ரூ. 600க்குள்ளேயே முடிந்தவிடுகிறது. இதனால் புறநகர் ரயில்களில் இனி மக்கள் கூட்டம் அலைமோதும் என்று தெரிகிறது. பேருந்து பயணத்தை விட ரயில் பயணமே மேல் என்ற நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். எனினும் ரயில் சேவை இல்லாத வழித்தடங்களில் வேறு வழியின்றி அரசுப் பேருந்தைத் தான் மக்கள் நம்பி இருக்க வேண்டி இருக்கிறது.