பெண் என்றால் சிடி.. ஆண் என்றால் டீக்கடை.. வாட்ஸ்ஆப்பில் அனுப்பியதாக மனோபாலா மீது புகார்
அதிமுக நட்சத்திர பேச்சாளரான நடிகர் மனோ பாலா அதிமுக பொதுச்செயலளார் சசிகலா குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தையும், சசிகலாவையும் தரக்குறைவாக விமர்சிக்கும் வகையில் வாட்ஸ் ஆப்பில் செய்தி அனுப்பியதாக நடிகர் மனோபாலா மீது அதிமுக பிரமுகர் ஒருவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவர் வகித்து வந்த அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு ஜெயலலிதாவின் தோழி சசிகலா நியமிக்கப்பட்டார்.
கடந்த 31ஆம் தேதி அவர் பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக்கொண்டார். ஜெயலலிதா இடத்தை அவர் பிடிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் கட்சியில் உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பலர் கட்சியில் இருந்து விலகி வருகின்றன.
ஸ்டார் பேச்சாளர் மனோபாலா
இந்நிலையில் பல ஆண்டுகளாக அதிமுக நட்சத்திர பேச்சாளராக உள்ள நடிகர் மனோபாலா, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குறித்தும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்தும் தரக்குறைவாக விமர்சித்ததாக சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சீனி சரவணன்
நங்கநல்லூரைச் சேர்ந்த சீனி சரவணன் என்பவர் நடிகராகவும் உள்ளார். இவர் நேற்று போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் மனோ பாலா மீது புகார் அளித்தார்.
ஜெ. விசுவாசி
அதில் தான் மறைந்த ஜெயலலிதாவின் தீவிர விசுவாசி என்று தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் மனோபாலா சக நடிகர்களின் வாட்ஸ்அப் குரூப்பில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா குறித்தும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் குறித்தும் தரக்குறைவாக விமர்சித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.
நடவடிக்கை எடுங்க
இதுகுறித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அந்த புகார் மனுவில் சீனி சரவணன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் நட்சத்திர பேச்சாளரான நடிகர் ஆனந்த் ராஜ் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அக்கட்சியில் இருந்து விலகியது குறிப்பிடத்தக்கது.
சிடி - டீக்கடை
அந்த சர்ச்சைக்குரிய வாட்ஸ் ஆப் செய்தியில் பெண்ணாக பிறந்தால் சிடி கடையும், ஆணாக பிறந்தால் டீக்கடையும் வைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்ததாக சீனி சரவணன் கூறியுள்ளார்.